உத்தராகண்ட் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது அம்மாநிலத்தைச் சேர்ந்த U19 முன்னாள் கிரிக்கெட் வீரரின் தந்தை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின்போது அணியின் மேலாளர் நவ்நீத் மிஸ்ரா மற்றும் வீடியோ ஆய்வாளர் பியூஷ் ரகுவன்ஷியால் தனது மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுத்ததாக அவர் புகாரில் தெரிவித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மஹிம் வர்மா, தலைமை பயிற்சியாளர் மணீஷ் ஜா, தொடர்பாளர் சஞ்சய் குசேன் ஆகியோரிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வசந்த் விஹார் காவல் நிலையத்தில் டேராடூன் போலீஸார் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இதுகுறித்து டேராடூன் காவல்துறை எஸ்எஸ்பி ஜன்மேஜய கந்தூரி பேசும்போது, கடந்த மூன்று நாள்களாக, நாங்கள் மஹிம் வர்மா, மனிஷ் ஜா மற்றும் சஞ்சய் குசைன் ஆகியோரை தனித்தனியாக அழைத்து அவர்களிடம் விசாரணையை நடத்தி இருக்கிறோம். அவர்களின் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டோம். தேவைப்பட்டால் அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் எனக் கூறினார்.
சமீபகாலமாகவே உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ரஞ்சி டிராபியில் உத்தராகண்ட் மாநிலத்துக்காக விளையாடும் வீரர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்காத நிர்வாகிகள், ஸ்விக்கி, ஜொமோட்டாவில் ஆர்டர் போட்டுச் சாப்பிடுமாறு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
“அதுமட்டுமில்லாமல் ஒருநாள் உணவு சாப்பிடவில்லை என்றால் யாரும் இறந்துபோகமாட்டீங்க” என்று அணியின் மேலாளர் கூறியதாக வெளியான செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திருக்கிறது. இந்தப் புகார் குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தராகண்ட் எம்.எல்.ஏ உமேஷ் குமார், உத்தராகண்ட் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஊழல் மற்றும் சூதாட்ட சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.