பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதை விட நிர்மலா சீதாராமனுக்கு கிரகங்களில் தான் ஆர்வம் – காங்கிரஸ் சொல்கிறது

புதுடெல்லி,

அமெரிக்க ‘நாசா’ அமைப்பின் வெப் தொலைநோக்கி எடுத்த யுரேனஸ், புளுட்டோ, வியாழன் ஆகிய கிரகங்களின் புகைப்படங்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்தநிலையில், இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது பற்றிய திட்டத்துடன் நிதி மந்திரி வருவார் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால், அவரோ யுரேனஸ், புளுட்டோ, வியாழன் கிரகங்கள் மீதுதான் ஆர்வமாக இருக்கிறார். அந்த கிரகங்களுக்கு வழி காட்டுகிறார்.

மோடி அரசு 8 ஆண்டுகளாக நல்லிணக்கத்தை குலைப்பதில்தான் தீவிரமாக இருக்கிறது. பணவீக்கம், வேலையின்மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை பா.ஜனதாவின் செயல்திட்டத்திலேயே இல்லை. வேலையின்மை, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், பா.ஜனதா அரசு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறது?

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.