பஹத் பாசில் படம் மூலம் 30 வருடத்திற்கு பிறகு மலையாளத்தில் ஏஆர்.ரஹ்மான் ரீ-என்ட்ரி

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் இசையமைப்பதற்கு தனது முழு நேரத்தையும் ஒதுக்கியதால் மற்ற தென்னிந்திய மொழி படங்களில் பெரிய அளவில் அவரால் பங்களிப்பை தர இயலவில்லை. அந்த வகையில் மலையாளத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான யோதா என்கிற படத்திற்கு மட்டும் இசையமைத்திருந்தார் ஏஆர் ரஹ்மான். இந்த நிலையில் பிரித்விராஜ் நடிப்பில் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் ஆடுஜீவிதம் படத்திற்கு அவர்தான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் மூலம் தான் அவர் மலையாள திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் என சொல்லப்பட்டு வந்தது. அதே சமயம் தற்போது மலையாளத்தில் பஹத் பாசில் நடிக்கும் மலையான் குஞ்சு என்கிற படத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க, அறிமுக இயக்குனர் சஜிமோன் பிரபாகரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் வரும் ஜூலை-22ல் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சோளப்பெண்ணே என்கிற பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. கிராமத்தில் இளம்பெண்ணுக்கு செய்யப்படும் திருமண சடங்குகளை மையப்படுத்தி மெலடி பாணியில் இந்த பாடலை உருவாக்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த வகையில் 30 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர் ரஹ்மானின் மலையாள ரீ என்ட்ரி படம் என்கிற பெருமையை மலையான் குஞ்சு படம் தட்டிச் சென்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.