யாதுமாகி நின்றாய் காளி! | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

மிகுந்த பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது அந்த பிரதான சாலை.விர்விர்ரென்று போவதும் வருவதுமாய்ப் பறந்து கொண்டிருந்தன வாகனங்கள்.

காலை மணி ஒன்பதுதான் இருக்கும்.

ஒன்பது மணிக்கே வெயிலின் தாக்கம் தீவிரமாய் தகிக்க ஆரம்பித்திருந்தது.

சாலையின் ஓரமாய் வெகு ஜாக்கிரதையாய் நடந்து கொண்டிருந்தாள் காளியம்மா.

சுட்டெரிக்கும் வெய்யில் காளியம்மாவின் முதுகைப்பதம் பார்த்தது.அதுவும் துணிமூடா பின்கழுத்தில் தகிக்கும் வெய்யில் சுரீரென்று சுட்டுத்தாக்க காந்தியது பின்கழுத்து.

அடியம்மாடி..என்னா வெய்யிலு.. என்னா வெய்யிலு..காலேல ஒம்போது மணிக்கே இப்பிடி காந்துனா..திரும்பி வாரக் கொள்ள..ஆவட்டசோவட்ட இட்டுடும் போலருக்கே..அம்புட்டு தூரம் நடந்துபோவ முடியுமா?தனக்குத்தானே கேட்டபடி நடையைத்தொடர்ந்தாள் காளியம்மா.

காளியம்மாவுக்கு ஐம்பத்தஞ்சு ஐம்பத்தாறு வயதிருக்கலாம்.

நிதானமான உயரம். ஒட்டி உலர்ந்து வரண்டுபோன கருத்த உடல்.கருப்பும் வெளுப்புமாய் தலைமுடி.. சற்றே வெளிப்புறமாய் நீண்ட மேல்வரிசையின் நான்கு பற்கள்.. முழங்கையிலிருந்து விரல்கள்வரை சூம்பிப்போய் தொங்கிக் கிடக்கும் வலது கை..மேட்டு நெற்றி.. நெற்றியில் பெரியசைஸ் மெரூன்கலர் ஸ்டிக்கர் பொட்டு.. வகிட்டின் ஆரம்பத்தில் சிகப்புகலர் குங்குமம் ஒரு ரூபாய் காசளவு.. காதில் பத்து ரூபாய்ப் பூத்தோடு.. மூக்கில் எண்ணையிறங்கிய மங்கலான வெள்ளை ஒற்றைக்கல் மூக்குத்தி..கழுத்தில் பிசுக்கேறிய மஞ்சள்நிறம் மங்கிப்போனத் தாலிக்கயிறு..இடது கையில் பிளாஸ்டிக் வளையல் ஒற்றையாய்ப் பச்சைக்கலரில்.. கால்களில் தேய்ந்துபோன ஹவாய்ச் சப்பல்..குதிகாலின் பின்புறம் கோடுகோடாய்ப் பித்தவெடிப்பு. மொத்தத்தில் காளியம்மாவின் உருவமே அவளின் ஏழ்மையைப் பறைசாற்றப் போதுமானதாய் இருந்தது.

வலது கை வெறும் அத்துக்குத்தான் என்பதால் இடதுகையின் முழங்கையில் மஞ்சப்பையொன்று தொங்கிக்கொண்டிருக்க அதிலிருந்த

ப்ளாஸ்டிக் தண்ணீர்பாட்டிலின் மேல்பாகம் கழுத்துவரை வெளியே தெரிந்தது. பையில் கைவிட்டு மிகவும் பழசாய்த் தெரிந்த சிறியசைஸ் பர்ஸ் ஒன்றை வெளியே எடுத்துப் பார்த்துவிட்டு அதை மீண்டும் பைக்குள் போட்டுக் கொண்டாள் காளியம்மா. ஒருவேளை பர்ஸ் பத்திரமாய் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டாளோ என்னவோ.

உஸ்..உஸ்..அடியம்மாடீ..தார்ரோடே உருகிடும் போலல்ல அடிக்குது வெய்யிலு..அடிக்கிற காத்துகூட அனலல்ல வாரியடிக்குது.. நாக்கு..ஒதடெல்லாம் வரண்டுல்ல போவுது..ஒடம்பெல்லாம் பத்தி எரியுறாப்லல்ல இருக்கு.. முணுமுணுத்தவாரே எங்காவது நிழல் கிடைக்குமா என்று பார்த்தாள்.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை மரமோ செடியோ ஒன்றையும் காணோம்.சாலையில் போக்குவரத்தும் பரபரப்பும் இரைச்சலும் இப்போது அதிகமாகியிருந்தன.தண்ணீர் குடித்தால் தேவலாம்போல் இருந்தது காளியம்மாவுக்கு.சாலையின் மிக ஓரமாய்ப்போய் நின்றுகொண்ட காளியம்மா இடது கை முழங்கையில் தொங்கும் மஞ்சப்பையை சூம்பிக்கிடந்த வலதுகையை லேசாய் உயர்த்தி அதில் மாட்டி இடது கையால் பாட்டில் மூடியைத் திறந்து பாட்டிலை எடுத்து கொஞ்சமாய் வாயில் ஊற்றிக் கொண்டாள். திரும்பி வர்ரவரைக்கும் இம்மாந் தண்ணியவச்சுதான் சமாளிக்கணும்.

நாக்கையும் ஒதட்டையும்தான் நனச்சுக்கலாம் என்று நினைத்தவாறே ஒருமடக்குத் தண்ணீரைமட்டும் குடித்துவிட்டு நாக்கால் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டாள்.முகத்தையும் பின் கழுத்தையும் ஈரப்படுத்திக் கொண்டால் தேவலாம்போல் இருந்தது.பாட்டிலை லேசாய்ச் சாய்த்து முகத்திலும் பின்கழுத்திலும்

அதிகமாய்த் தண்ணீர் கொட்டிவிடாமல் ஜாக்கிரதையாய் ஊற்றிவிட்டு பாட்டிலைமூடி பையில் போட்டுவிட்டு இடதுகையால் புடவைத்தலைப்பை இடுப்பிலிருந்து உருவி முகத்தையும் பின் கழுத்தையும் துடைக்க ஈரம் பரவியதால் முகமும் பின்கழுத்தும் தண்ணீர் பட்டு காந்தும் சூட்டிலிருந்து கொஞ்சம் இதப்பட்டன.கொளுத்தும் வெய்யிலிலும் டீக்கு ஆசைப்பட்டது மனதும் நாக்கும்.

மனதையும் நாக்கையும் அடக்கிவிட்டு மீண்டும் நடையைத் தொடர்ந்தாள் காளியம்மா. ஷேர் ஆட்டோவொன்று நின்று பயணிகளை இறக்கிவிட்டு காலியாகிக் கிளம்பியபோது.. பேசாம ஆட்டோலன்னா போயிடலாமா.. வெய்யிலுல நடக்கல்ல முடியல..மனசு சொன்னது..ம்கூம்.. ஆட்டோவுக்கு இருவது ரூவால்ல குடுக்கணும்..கையில இருக்குறதே இருநூத்து இருவதும் ஒரு ரெண்டு ரூவா சில்லரையும்தான்..இதுல ஆட்டோவுல போகவும் டீ குடிக்கவும் ஆசப்பட்டா முடியுமா..அப்புறம் சேல வாங்கவும் ரவுக்கதுணி வாங்கவும் பணம் பத்தாம போயிடுச்சுன்னா.. சேலையும ரவுக்க துணியும் வாங்கதானே கடைக்குப் போவுறோம். இருநூறு ரூவாயில சேலையும் ரவுக்க துணியும் வாங்க முடியுமான்னு கவலையால்ல இருக்கு..இப்பிடி தெனந்தெனம் அல்லாடி அல்லாடி வாழனும்னு தலவிதி இருக்கறச்சே புதுசேல புது ரவுக்க வாங்கனும்னு ஆசப்படுறதும் தப்புதானே..நாம பொறந்தப்பவே அப்பனும் ஆத்தாவும் வாயில கள்ளிப்பால ஊத்தியோ நெல்லப் போட்டோ கொன்னுருக்கலாம்ல.. பொறந்துமே செத்துருந்தா இம்மாம் பாடு படவேணாம்ல.. அவுங்களுக்கென்ன..பொறந்த பொட்டபுள்ளைக்கி கையுஞ்சரியில்ல கட்டிக்குடுக்கக் காசுமில்லன்னு பதிமூணுவயசுலயே.. நாங்கட்டிக்- கிறேன்னு வந்த மொடாக்குடியன்ட்ட என்னிய புடிச்சிக் குடுத்துட்டு போய்ச்சேந்துட்டாங்க.. ஒரு நா சொகப்பட்ருப்பேனா புருஷங்கிட்ட..

குடோனுல லாரீல தானியமூட்ட ஏத்தி எறக்குற வேலபாத்து சம்பாரிக்கிற அம்புட்டு காசயும் குடிச்சேல்ல அழிக்கும்.அஞ்சு ரூவா காச கைல குடுத்துருக்குமா..குடிச்சிட்டுவந்து தெனமு அடி ஒத அடி ஒத..வேற என்ன கண்டேன் பாவி புருஷங்கிட்ட..இப்ப.. குடிச்சிகுடிச்சி ஈரக்கொல கெட்டுப் போயி படுத்தபடுக்கையா சீக்காளியால்ல கெடக்கு..அதுக்கு மருந்துவாங்கவே மாசம் எரநூறு ரூவால்ல செலவாவுது..நா சம்பாரிக்கிறதே மாசம் எட்டு நூறுதான்..என்ன நாலுவீட்டுல பத்துப்பாதிரம் தேச்சாகூட வீட்டுக்கு ஆயிரம் குடுப்பாங்க..எனக்குதா வலது கையி வெளங்கிலியே.. தொளதொளன்னு தொங்குற கையவச்சுக்கிட்டு என்னா செய்யிறது..எடது கைய மட்டும் வச்சுக்கிட்டு பத்துப்பாத்திரம் தொலக்க முடியுமா..பீச்சாங்கையால ஏதோ நாலு அப்பார்ட்மெட்டு கூட்டி பெருக்கி வாச தெளிச்சி கோலம் போட்டு மாசம் எட்டு நூறு சம்பாரிக்கிறேன்.குடியிருக்குற குடிசைக்கு வாடக எரநூறு.. சீக்காளி புருஷனுக்கு மருந்துக்கு எரநூறு போக மீதி நானூறு ரூவால விக்கிறவெலவாசியில எப்பிடி காலந்தள்ளுறது..ரேஷன் கடைய நம்பிதா காலம் ஓடுது.இதுல புதுசேல வாங்குறது எப்பிடி..கூட்டிப் பெருக்குற அப்பார்ட்மென்ட்டுல பொம்புளைங்க சிலபேரு கட்டிக்கழிச்ச சேலைங்கள குடுப்பாங்க..அதக்கட்டியே காலம் தள்ளுற எனக்கு புதுசா சேல வாங்குற ஆசையெல்லாம் இல்ல..ஆனா பத்துநா முன்னாடி லட்சுமி அக்கா வூட்டுக்கு வந்து மவன் வவுத்து பேத்திக்கு காதுகுத்து வெச்ருக்கேன்..நீ கட்டாயம் வரணும் வராம இருந்துடாதன்னு சொல்லிட்டு

பத்திரிகைல கொடுத்துட்டு போச்சு..வீட்டுப் படியேறி வந்து பத்திரிக்க வெச்சுக் கூப்ட்ருக்கு..போகாம இருக்க முடியுமா..ஒருவிசேஷம்னு போகக்கொள்ள பட்டுப்பொடவ இல்லாட்டியும் நல்லசேலயா கட்டிக்கிட்டு பளிச்சுணு போவணுமில்ல..அப்பதானே நாலுபேரு மதிப்பாவ..அதான் புது சேல வாங்கனும்ங்கற அவசியமாயிடுச்சு.இல்லாட்டி இந்த தரித்திரம் புடிச்சவ சேல வாங்குறதாவது?..பெருக்கிக்கூட்டுற வூடுங்கள்ள ரெண்டு வூட்டுல நூறு நூறுன்னு இருநூறு ரூவா கடனவாங்கில்ல சேல வாங்க வந்துருக்கேன்.கடன மாச சம்பளத்துல கழிச்சிடனும்..என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே எப்போதும் பரபரப்பும் மக்கள் கூட்டமும் ஏகத்துக்கும் இறைச்சலுமாய் இருக்கும் அந்த வணிக வளாகங்கள் நிரம்பியிருக்கும் தெருவுக்குள் நுழைந்தாள் காளியம்மா.

உயர உயரமாய் அடுக்குமாடிகளோடு பெரிய பெரிய பேனர்களும் நிரம்பிவழியும் கூட்டமுயாய் வரிசைகட்டி நின்ற ஜவுளிக்கடைகள் காளியம்மாவை மிரட்டின.மிகப் பிரபலமான அந்த ஜவுளிக்கடையின்

வாசலில்போய் காளியம்மா நின்றபோது கடையின் உள்ளே யிருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வாசல் வரை வந்த ஜில்லென்ற குளிர்காற்று தகிக்கும் வெய்யிலில் வாடி வதங்கிப் போயிருந்த அவளின் உடலைத் தொட்டுத்தழுவியபோது..ஸ்ஸ்ஸ்..அப்பாடி..சில்லுன்னு..என்னா சொகமா இருக்கு..என்றாள் மெதுவாய்க் குளிர்ச்சியை அனுபவித்தபடி.. கடைக்குள் போவோரும் வருவோருமாய் கொத்துக் கொத்தாய்க் கூட்டம். கடைக் குள்ளிருந்து வெளியே வருபவர்கள் கைகளில் நிறைமாத கர்பிணியின் வயிறுபோல் துணிகள் நிரம்பி உப்பிய பைகள்..எல்லோருமே டிப்டாப்பாய் வசதி படைத்த வர்களாய்த் தெரிந்தார்கள் காளியம்மாவின் கண்களுக்கு.

இம்மாம் பெரிய கடைக்குள்ள நாம போனா நம்மள மதிப்பாவுளா..

இருநூறுரூவாக்குள்ள சேலையும் ரவுக்கத்துணியும்னு கேட்டா சிரிப்பாங்களோ..போ..போன்னு வெரட்டிவிடுவாங்களோ..ம்கூம்..இது

பணக்காரவுங்க துணிவாங்குற கட..

நமக்கெல்லாம் சரிபட்டு வராது..என்று நினைத்தவளாய் மேற்கொண்டு நடக்கத் தொடங்கியவள் அடுத்தடுத்து காணப்பட்ட பெரிய கடைகளைத் தவிர்த்துவிட்டு பதினைந்துக்குப் பத்து என்ற சைஸில் நின்ற பிஆர்கே

சாரீஸ் சென்ட்டர் என்ற போர்டு தொங்கிய சிறிய அளவிலான புடவைக்கடையின் வாசலில் வந்து நின்றாள்.கடையின் வாசலில் கயிற்றில் க்ளிப் போடப்பட்டு நிறைய புடவைகள் தொங்கின. காளியம்மாவின் மனதில் இந்தக் கடையில் நமக்கான சேலை கிடைக்குமென நம்பிக்கை தோன்றியது.

கடைக்குள் கண்களை செலுத்தியபடி தயங்கிநிற்கும் காளியம்மா மீது கல்லாவில் அமர்ந்திருப்பவரின் பார்வைபட..பெரியம்மா பொடவ வாங்க வந்தீங்களா..உள்ள வாங்க..

விதவிதமான சேலைங்க கொறஞ்ச வெலேல இருக்கு..வாங்க வந்து பாருங்க பெரியம்மா..உள்ளவாங்க

என்று வாயாற அழைக்க..தயக்கம் நீங்கியவளாய் மெல்லமெல்லப் படியேறி ஐந்துபடிகளைக்கடந்து கடைக்குள் நுழைந்தாள் காளியம்மா.

ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருந்த சீலிங்ஃபேன்களின் காற்று இதமாயிருந்தது காளியம்மாவுக்கு.

பெரியம்மா என்னா சேல பாக்குறீங்க..கல்லாக்காரர் கேட்க பதில் சொல்லத்தெரியவில்லை காளியம்மாவுக்கு.

சேல எத்தினி ரூவாயிலப் பாக்குறீங்க பெரியம்மா?..

இருநூறு ரூவாக்குள்ளாற பொடவயும் ரவுக்கத் துணியும்..

பாண்டீ..பெரியம்மாக்கு பூனம் பொடவ எடுத்துபோடு..கடையில் வேலைசெய்யும் பையனைப்பார்த்து சப்தமாய்ச் சொன்னார் கல்லாக்காரர்.

பாட்டீ..இங்க வாங்க..

பையன் அழைத்த இடம் நோக்கி நடந்தாள் காளியம்மா.

என்னா வெலக்கி பொடவ பாக்குறீங்க பாட்டீ..

இருநூறுக்குள்ள பொடவயும் ரவுக்கத் துணியும் சட்டெனச் சொன்னாள் காளியம்மா..

தள்ளு கண்ணாடி பொருத்தப்பட்ட

நீண்ட ஷோகேஸ் ரேக்கில் கலர்க்கலராய் விதவிதமாய் அடுக்கடுக்காய்ப் புடவைகள். அவற்றிலிருந்து பத்துக்கும் மேற்பட்டப் புடவைகளை எடுத்து நீளவாக்கிலிருந்த மேஜைமீது போட்டான் கடைப்பையன்.பாருங்க பாட்டீ என்றான்.

சேலை

ஒவ்வொரு புடவையாய் இடது கையால் நகர்த்திக்கொண்டே வந்த காளியம்மாவின் கண்கள் தான் வெகுகாலமாய் கட்டவிரும்பிய மெரூன் கலரில் புடவை கண்ணில் படுகிறதா என்று நெஞ்சுநிறைய ஆவலோடு பார்க்க.. ம்கூம்..பத்து புடவைகளில் ஒன்றுகூட மெரூன் கலரில் தென்படவில்லை. ஏமாற்றத்தோடு ரேக்கில் பார்வையை

செலுத்தினாள்..பாட்டீ வேற சேலன்னா பாக்குறீங்களா என்றபடி பையன் ரேக்கிலிருந்த ,புடவைகளை விரலால் ஒவ்வொன்றாய் இது இது இது என்று கேட்டபடி தொட்டுக் கொண்டே வர பச்சைப்புடவைக்கும் நீலப் புடவைக்கும் இடையே இருந்த மெரூன்கலர் புடவை சட்டெனக் காளியம்மாவின் கண்ணில்பட..தம்பி

தம்பி.. அத..அத..எடுப்பா என்றாள்.

கட்டைவிலாலும் ஆட்காட்டி விரலாலும் வெகு லாவகமாய் அந்தமெரூன் கலர்ப் புடவையை உருவி எடுத்துக் காளியம்மாவின்

முன் பிரித்துப் பரத்திப்போட்டான் பையன்.மெரூன் கலர் உடலில் சந்தனக்கலரில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சின்னச் சின்ன. அன்னபட்சி டிஸைனாய் போடப்பட்டிருக்க.. புடவையின் பார்டரும் நாலு விரல்கட்டை ஜரிகை பார்டர்போல் அமைந்திருந்தது.. முந்தியிலும் குட்டிக்குட்டியாய் சந்தனக்கலரில் அன்னபட்சிகள் நீலநிற கட்டங்களுக்குள்.

அழகும் நேர்த்தியுமாய்க் கண்ணைப்பறித்த அந்த மெரூன் கலர் புடவையைப் பார்த்து அப்படியே

அசந்துபோய்விட்டாள் காளியம்மா.குப்பென்று மனதில் சந்தோஷம் பொங்கி முகத்தில் வந்து அமர்ந்தது.அடியம்மாடி..எம்மாம் நல்லாருக்கு இந்த சேல..கண்ணல்ல

பறிக்குது..எத்தினி நாளா இந்தக் கலருல ஒரு சேல வாங்கிக் கட்டனும்னு ஆசப்பட்டேன்.இடது கையால் புடவையை தொட்டுத் தொட்டுத் தடவிப்பார்த்தாள்.. புடவையிலிருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை.சட்டென கொஞ்சமாய் பயம் மனதுக்குள் எட்டிப் பார்த்தது.இம்மாம் அளகா இருக்குற சேல வெல அதிகமா இருக்குமோ..மனம் தவித்தது.

பாட்டீ..சேல புடிச்சிருக்கா..

புடிச்சிருக்கு..வெல எம்மாந்தம்பி.. காளியாத்தா..மாரியாத்தா வெல நா வாங்குற அளவு கொறச்சலா இருக்கணும் மனம் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டது.

புடவையில் இணைக்கப்பட்டிருந்த

விலை சீட்டை எடுத்துப்பார்த்த பையனின் வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைக்காக தவிப்போடு அவன் வாயையே பார்த்தபடி நின்றாள் காளியம்மா.

பாட்டீ..வெல அதிகமில்ல பாட்டீ..

நூத்தியம்பத்தஞ்சு ரூவாதா பாட்டீ

என்று கடைப்பையன் சொன்ன அந்த வினாடி குபீரென்று எழுந்த சந்தோஷத்தில் காளியைம்மாவின் உடம்பு தானாகவே ஒரு ஆட்டம் ஆடி நின்றது.

காளியாத்தா என்று..மகிழ்ச்சியில் வாய் அவளையறியாமல் சப்தமாய் உச்சரித்தது.

இதுக்கு ஏத்தாப்புல ரவுக்க துணிக்கு

எம்மாம் காசாகுமோ..பொடவக்கி நூத்தி அம்பத்தஞ்சு போயிட்டுன்னா மிச்சகாசுக்கு ரவுக்கதுணி வாங்கிட

முடியுமா..மனம் கவலையில் கணக்குப் போட்டது.

தம்பி…ரவுக்கதுணி எம்மா ஆகும்..

பாட்டீ..ஒங்குளுக்கு எம்பளது சென்ட்டி மீட்டர் போதும்.பிட்டுலயே கெடைக்கும்..நாப்பத்தஞ்சு ரூவா ஆகும் பாட்டீ..

சேலயும் ரவுக்க துணியும் சேத்து

எம்மா ஆவுது தம்பீ..

ரவுண்டா எரநூறு ரூவா ஆவுது பாட்டி..

எரநூறுக்கே ரெண்டுமா.. சந்தோஷத்தில் மூச்சே நின்றுவிடும் போலிருந்தது காளியம்மாவுக்கு.

பணத்தைச் செலுத்தி புதுப்பையில்

புடவையையும் ஜாக்கெட் பீஸையும் பில்லோடு சேர்த்து வாங்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியேவந்த காளியம்மாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

கடைக்குள்ளாற டூப்புலைட்டு வெளிச்சத்துல பாத்த சேலய பகல்

வெளிச்சத்துல பாத்தா எப்பிடி இருக்கும் என்ற ஆசை மனதில் எழ

ஒரு ஓரமாய்ப்போய் நின்றுகொண்டு புடவை இருந்த பையை.. வலது கையை லேசாய் மேல் நோக்கித் தூக்கி அந்த சூம்பிய கையில் மாட்டிப் பையிலிருந்த புடவையை இடது கையால் கொஞ்சமாய் வெளியே இழுத்துப் பார்த்தபோது சந்தோஷ மிகுதியால் ஊவென்று கத்தவேண்டும்போல் இருந்தது

காளியம்மாவுக்கு.அடியம்மாடி..

கடைக்குள்ளாற லைட்டு வெளிச்சத்துல பாத்தபோது இருந்தத

விட வெளிய வெளிச்சத்துல சேல

ரொம்பல்ல சூப்பரா இருக்கு..இந்தப் பொடவயயும் கட்டி இதுக்கு மேச்சா

புது ரவுக்கத்துணீல ரவுக்கையும் தச்சுபோட்டுக்கிட்டா..கற்பனையில் தன்னைத்தானே பார்த்து ரசித்துக்கொண்டாள் காளியம்மா.

மீண்டும் புடைவைப் பையை இடது கைக்கு மாற்றிக்கொண்டு சற்றே குனிந்து பைக்குள்ளிருந்த புடவையை முகர்ந்து பார்த்தாள். புதுப்புடவைக்கேயுரிய ஒருவிதமான வாசனை நாசியை நிறைத்து நெஞ்சில் இறங்கி காளியம்மாவைக் கிறங்கவைத்தது.

நடுப்பகல். உச்சிக்கு வந்து நின்றான்

சூரியன்.பதைபதைக்க வைக்கும் பட்டையைக்கிளப்பும் வெய்யில்.. இருந்த காசுக்கு மனதுக்குப் பிடித்த சேலையும் ரவிக்கைத்துணியும் அமைந்துவிட்டதில் மனதில் திருப்தியும் சந்தோஷமுமாய் நடக்க ஆரம்பித்தாள் காளியம்மா.

எங்கிருந்தோ இஞ்சி டீயின் மணம் காற்றில் கலந்து வந்து நாசியைத் தொட்டது.நாக்கும் மனமும் டீ கெடச்சா என்று ஆசைப்பட்டன.

க்கும்..கொண்டு வந்த காசே எரநூத்து இருவத்ரெண்டுதா..பொடவ ரவுக்கைக்கே எரநூறு போய்ட்டு.. மிச்சமிருக்குறதே இருவத்ரெண்டுதா

இதுல டீ குடிச்சா பன்னென்ரூவா போயிடும்.மிச்சம் பத்ரூவாதா இருக்கும்.இந்த பண்ணெண்டுமணி வெய்யிலுல வூட்டுக்கு அம்மாந்தூரம் நடந்து போவமுடியுமா.. ஷேர் ஆட்டோவுலதான் போவனும்.. ஆட்டோக்கு இருவது ரூவா ஆவும். வூட்டுல காலேல சீக்காகெடக்குற கெழவனுக்கு ஒரு டம்ளரு கோதும கஞ்சிதானே குடுத்துட்டு வந்தே..

அதுக்குப் பசிக்குமில்ல..சீக்கிரம் போயி சோறாக்கணும்..நடந்து போனா லேட்டாவும்..கொளுத்துர வெய்யிலுல நடக்கல்லாம் முடியாது.

டீ குடிக்கும் ஆசையை நிராகரித்து விட்டு மெயின் ரோட்டிலிருக்கும் ஷேர் ஆட்டோ நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் காளியம்மா.

Representational Image

டெய்லர் தொர அண்ணங்கிட்ட குடுத்து ரவுக்க தெச்சிடனும்.. தக்கிர கூலிய மாசாமாசம் கொஞ்கொஞ்சமா குடுத்தா போதும்.அண்ண ஒன்னுஞ் சொல்லாது..சுப்பு அக்காட்ட நூத்தம்பது ரூவா கைமாத்து கேக்கனும்..லட்சுமி அக்கா பேத்தி காதுகுத்துக்குப் போனா அதும் பேத்திகைல நூறு ரூவாயாச்சும் தரணுமில்ல..சும்மா கைவீசிக்கிட்டுப் போவாங்களா..நமக்கு காது கழுத்து கைக்கு எத எடுத்தாலும் பத்து ரூவா கடையில புதுசா வாங்கிப் போட்டா தானே கொஞ்சமாச்சும் எடுப்பா இருக்கும்.சுப்பு அக்கா பணம் குடுக்கும்..இல்லேன்னு சொல்லாது..

ஆனாலும் தலைக்குமேல கடன ஏத்திக்கிட்டா..திருப்பிக் குடுக்கனு மில்ல.. ப்ச்..எப்பவும் ஏழைங்கபாடு இப்பிடித்தான்.. நெடுமூச்செரிந்தாள் காளியாம்மா.

மெயின் ரோட்டில் காளியம்மா கால் வைத்தபோது ரோட்டை அடைத்துக் கொண்டு வட்டவடிவமாய் நின்று கொண்டிருந்தது மக்கள் கூட்டம். என்னாது இம்மாங் கூட்டம் நிக்கிது.

கார்கார ஆட்டோகார வேன் கார எவனாச்சும் யாரையாவது அடிச்சிமோதிட்டு போயிருப்பானோ..

அதா..விட்டத புடிக்கப் போறாப்புல கண்ணுமண்ணு தெரியாமல்ல ஓட்டுறானுவ.. என்று நினைத்தபடியே வேடிக்கைப் பார்த்தபடி நிற்பவர்களின் இடையே இருந்த இடைவெளி வழியாக உள்ளே பார்த்தாள்.உள்ளே.. இருபத்ரெண்டிலிருந்து இருபத்தைந்து வயதுக் குள்தான் இருக்கும் ஒரு பெண்ணின் உடல் ரோட்டில் மல்லாந்து கிடந்தது. கண்கள் வானத்தைப் பார்த்தபடி நிலை குத்திக் கிடந்த பெண்ணின் மண்டைபிளந்து உடலின் இருபுறமும் ஆறாய் ஓடிய ரத்தம் ரோட்டில் ஆங்காங்கே ஜல்லி பெயர்ந்து உருவாகியிருந்த சின்னதும் பெரிதுமான பள்ளங்களில் குளம்போல் தேங்கியிருக்க..வாய் லேசாய்த் திறந்திருந்தது.கட்டியிருந்த

சேலையின் மாராப்பு விலகி கழுத்தில் நீள்வாக்கில் பாம்புபோல கிடந்தது.ஜாக்கெட்டும் உள்ளே அணிந்திருந்த வட்டுடையும்

சற்றே மேலேறி மறைக்கப்பட வேண்டியவை கால்பாகம் வெளியே தெரிந்தன.பெண்ணின் நிறம் நடிகை

தமன்னாவின் நிறம்போல் பளீர் நிறமாய் இருந்ததால் ஆங்காங்கே

உடலில் தெறித்திருந்த ரத்தப் பொட்டுக்கள் பளீர் நிறத்தை மேலும் அதிகப்படுத்திக் காட்டியது. சேலையின் கீழ்ப்பாகம் முழங்கால்களுக்கும் மேலேறித் தொடையின் பெரும்பகுதி வழுவழுவென வாழைத் தண்டுகளாய்ப் பளீரென வெளியே தெரிந்தன.கைகளில் ஒன்று தலைக்குமேலேயும் மற்றொன்று

மடங்கியும் கிடந்தன.பெண்ணின் உயிறற்ற உடல் கிடந்த இடத்தி- லிருந்து நான்கடி தூரத்தில் ஒருவேன் நின்றிருக்க வேனுக்கு அடியில் அப்பளமாய் நசுங்கிப்போன ஒரு ஸ்கூட்டி பாதி வேனுக்கு அடியிலும் மீதி வெளியே தெரிந்தபடியும் விழுந்து கிடந்தது.போலீஸ் தலைகள் எதுவும் தென்படவில்லை.

வேடிக்கைபார்த்தபடி நின்றிருந்த

இருவரை இடதுகையால் நகர்த்தி

விலக்கிவிட்டு முன்னால் வந்தாள் காளியம்மா.

உயிரற்ற சடலமாய்க் கிடக்கும் இளம்பெண் கண்ணில் பட..ஐயோ..

ஐயோ..யாரு பெத்த பொண்ணோ நீ.. அடிப்பாவி பொண்ணே இப்டி அல்பாயுசுல போய்ட்டியே..சாவுற வயசாஇது..போய்ட்டியே..பொசுக்குனு போய்ட்டியே..மார்பில் அடித்துக்கொண்டு கத்தினாள் காளியம்மா.இவள் கத்துவதை சுற்றிநின்ற யாரும் கண்டு கொள்ளவில்லை.

சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சில ஆண்கள் இளம் பெண்ணின் சடலத்தின் கால்மாட்டில் நின்று லேசாய்க் குனிந்து செல்ஃபோனில் ஃபோட்டோ எடுப்பதும்.. தலைமாட்டிலிருந்து ஃபோட்டோ எடுப்பதும்.. பக்கவாட்டிலும் நின்று எடுப்பதும்.. மேற்புறமாய் ஜும் செய்து முகத்திலிருந்து கால்வரை எடுப்பதுமாய் பரபரப்பாய் இருக்க,

சிலர் செல்லில் நெருக்க மானவர்களை ஸ்பாட்டுக்கு வரும்படி

அழைத்துக் கொண்டிருக்க.. மனசாட்சியற்ற வக்கிரம் பிடித்த சில ஆண்களால் தரம் தாழ்ந்ந செயல்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன. பெண்ணின் உடலாய் இருந்தால் போதும் அது பிணமாய் இருந்தாலும் பரவாயில்லை என ஆடைவிலகிப் பிணமாய்க் கிடக்கும் பெண்ணின் உடலை வெறித்தனமாய் பார்த்தபடி நின்றிருந்தார்கள் சில வக்கிர மனம் படைத்த ஆண்கள். ஆண்கள் அனைவருமே கயவர்கள் இல்லை..

சிலர்தான் இப்படி.

முன்பின்கூட தெரியாத ஒரு பெண்ணின் சாவுக்கு வருந்தி வாய்விட்டு சத்தம்போட்டு ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த காளியம்மாவின் கண்களில் அடாத செயல்களில் ஈடுபட்டிருந்தவர்களின் பண்பாடற்ற செயல்கள் பட.. திரிசூலம் ஏந்தாதக் காளியாகிப்– போனாள் காளியம்மா..

அட..கேடுகெட்ட செம்மங்களா.. செத்துக்கெடக்குறது நம்மமாரி ரத்தமுசதையுமான ஒருபொண்ணு..வாழவேண்டிய வயசுப்பொண்ணுன்னு இல்லாம.. பொணத்த அங்கிட்டு நின்னு போட்டொ எடுக்குறீங்க.. இங்கிட்டு நின்னு போட்டோ எடுக்குறீங்க.. ஒங்குளுக்-கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு கெடையவே கெடையாதா.. இதுவே அடிபட்டுச் செத்துக் கெடக்குறது ஒங்க ஆத்தாவா அக்காவா தங்கச்சியா பொஞ்சாதியா இருந்தா இப்பிடி மாஞ்சி மாஞ்சி போட்டா எடுப்பீங்களாடா.. இல்ல கண்டவன போட்டா எடுக்கதா வுடுவீங்களா.. துத்தேறி.. வேட்டி கட்டுன இத்தினி ஆம்புளைங்க வேடிக்கப்பாத்துகிட்டு நிக்கிறீங்களே ஒத்தனுக்காவது

இடுப்புவேட்டிய உருவி அரையுங் கொரையுமா ஒடம்பு தெரிய விழுந்து செத்துக்குக்கெடக்குற இந்தப் பொண்ணுமேல போத்துவம்முனு தோணிச்சா..மானங்கெட்டவனுங்க-ளா வெறிக்க வெறிக்கப் பாத்துக்- கிட்டு நிக்கிறீங்க.. மனுஷங்களாடா நீங்க..ஆவேசம் வந்தவள் போல் கத்தினாள் காளியம்மா.. திடீரென டேய்..நகருங்கடா

என்று இடியென முழங்கினாள். போட்டோ எடுத்துக் கொண்டிருந்த- வர்களும் சுற்றி நின்றவர்களும் கொஞ்சம் அச்சத்தோடு சட்டென ஓரடி நகர்ந்து கொண்டார்கள்.

என்ன தோன்றியதோ..இடது கையில்

மாட்டியிருந்த தண்ணீர்பாட்டில் வைத்திருந்த பையை எடுத்து ரோட்டில் வைத்த காளியம்மா..

இன்னொரு பையான புதுப்புடவை

இருந்த பையை எடுத்து சூம்பிக்

கிடக்கும் வலது கையைச் சற்றே உயர்த்தி அதில் மாட்டினாள். இடது கையால் புதுப்புடவையிருந்த பையிலிருந்து புடவையை வெளியே இழுத்து எடுத்தாள். அத்துக்குத் தொங்கிக் கொண்டிருக்கும் வலதுகையை உப்புக்குச்சப்பாணியாய் உதவிக்கு அழைத்துக்கொண்டு இடதுகையால்

புடவையைப் பிரித்து விசிறி ஒரு உதறு உதறி சட்டெனக்குனிந்து பெண்ணின் உடல் மீது தலையிலிருந்து கால்வரை ஒரு

இன்ச்கூட வெளியே தெரியாமல் இருக்கும்படி போர்த்திவிட்டாள். அடுத்தநொடி..அந்தப் புத்தம் புது புடவை..காளியம்மா கடன்பட்டு வாங்கிய புடவை..பார்த்துப் பார்த்து ஆசை ஆசையாய்த் தொட்டுத் தொட்டுப் பார்த்த புடவை.. லட்சுமியக்கா வீட்டு விசேஷத்துக்குக் கட்டிக்கொண்டு செல்ல விரும்பிய புடவை..கற்பனையில் கட்டிப்பார்த்து மகிழ்ந்த புடவை..வாசனைபிடித்து சந்தோஷித்த புடவை.. நீண்டகாலமாய் கட்டிப்பார்க்க விரும்பிய அந்த மெரூன் கலர் புடவை..பெண்ணின் சடலத்தைச் சுற்றிலும் சாலையில் சின்னதும் பெரிதுமாய் இருந்த பள்ளங்களில் குளம்போல் தேங்கிக் கிடந்த ரத்தத்தில் மூழ்கிமூழ்கி அமிழ்ந்து அமிழ்ந்து நனைந்து நனைந்து தன் சுய நிறத்தை இழந்து சிகப்பு வண்ணமாய் மாறிப்போனது.

காளியம்மாவின் செயலைப் பார்த்து அதிர்ச்சியில் சிலைகளாகிப் போனதுபோல் அசைவற்று நின்றது வேடிக்கைப்பார்த்த கூட்டம்.

புடவையைப்போர்த்திவிட்டு நிமிர்ந்த

காளியம்மா வாயில் திரண்டிருந்த மொத்த எச்சிலையும் ஒன்றாகக் கூட்டித்.. த்தூ..எனத் தரையில் சப்தமாய் துப்பினாள்.

தவறான எண்ணத்தோடு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சில ஆண்களுக்கு எச்சில் தன் முகத்தில் உமிழப்பட்டதாகத் தோன்றியதோ என்னவோ..சட்டென அவர்களின் கைகள் தாமாக முகத்தைத் துடைத்தன.

ஒரு வேகத்தோடு யூ டர்ன் அடித்துத் திரும்பி மீண்டும் ஷேர் ஆட்டோ நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ஏழை காளியம்மா..இல்லை..இல்லை

அவள் வெறும் ஏழைக் காளியம்மா இல்லை..

பாரதியின் கண்ணமா அவள்..

பாரதியின் செல்லம்மா அவள்..

பாரதியின் புதுமைப்பெண் அவள்..

பாரதி சொல்லும் புரட்சிப் பெண் அவள்..எல்லாவற்றிற்கும் மேலாய்..

பாரதி பாடிப்பாடிப் பரவசமான..

“யாதுமாகி நின்ற காளி.” அவள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.