45 நாள் தலைமறைவாக வாழ்ந்த பிரபுதேவா

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பிள்ளை தயாரிப்பில் என்.ராகவன் இயக்கியுள்ள படம் மை டியர் பூதம். பேண்டஸி குழந்தைகள் படமாக உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா பூதமாக நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து இயக்குநர் என்.ராகவன் கூறியதாவது: என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு பீல் குட் டிராமா, கடம்பன் ஆக்சன் டிராமா, எனக்கு எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும் என்பது ஆசை. அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, குழந்தைகளுக்கான படம் செய்யலாம் என தோன்றியது.

தமிழில் குழந்தைகள் உலகை சொல்லும் படங்கள் இப்போது அதிகமாக இல்லை எனவே அதை சொல்லலாம் என நினைத்தேன். குழந்தைகள் உலகை புரிந்து கொள்வதற்காக முழுக்க என் மகளோடு நிறைய பழகினேன். குழந்தைகள் என்னென்ன விரும்புவார்கள் என தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் இந்த திரைக்கதை எழுதினேன்.

தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளையிடம் இந்தக் கதையை சொன்ன போது அவர் பிரபுதேவா மாஸ்டர் செய்தால் நன்றாக இருக்கும் என்றார். அதனால் பிரபுதேவாவிடம் கேட்டோம் அவருக்கு கதை பிடித்து உடனே ஓகே சொல்லி விட்டார். அப்படி தான் இந்தப்படம் ஆரம்பித்தது. இந்தப்படத்திற்காக பிரபுதேவா மொட்டை போட வேண்டியிருந்தது. அவர் நிறைய படங்கள் செய்து கொண்டிருந்ததால், யோசித்தார் கெட்டப் டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு அவரே மொட்டை போட்டுக்கொண்டு நடித்தார்.

45 நாட்கள் எங்குமே அவர் தலைகாட்டாமல் ஒரு தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்தார். இந்தப்படத்திற்காக முழுக்க அர்ப்பணிப்போடு உழைத்தார். அந்த கெட்டப்பில் ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்கள். இப்படத்தில் குழந்தையாக வரும் அஷ்வந்த கலக்கியிருக்கிறார். பிக்பாஸ் சம்யுக்தா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். குடும்பத்தோடு அனைவரும் ரசித்து, குழந்தைகள் கொண்டாடும் ஒரு படமாக இருக்கும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.