இந்தியா சீனா இடையே 16வது சுற்று பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடக்கிறது

புதுடெல்லி,

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக எல்லையில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்பப்பெற்றன. எனினும் டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது.

இந்த நிலையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 16-வது சுற்று பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடக்கிறது. இதில் இந்தியாதரப்பில் ராணுவ 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா பங்கேற்க உள்ளார்.

கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள ரோந்துப் புள்ளி 15-ல் இருந்து படைகளை திரும்பப்பெறுவதுடன், கிழக்கு லடாக்கில் அமைதியை உறுதிப்படுத்துமாறு சீனாவை இந்தியா வலியுறுத்தும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.