குடியுரிமை திருத்த மசோதா: நேபாள பார்லி., ஒப்புதல்| Dinamalar

காத்மாண்டு: நேபாள பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையில், அந்நாட்டின் முதல் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.
நம் அண்டை நாடான நேபாளத்தின் குடியுரிமை சட்டத்தில், அந்நாட்டு ஆணை மணக்கும் வெளிநாட்டுப் பெண், குடியுரிமை பெற ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அத்தகையோரின் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. எனினும், சட்டத் திருத்த மசோதாவில் சில பிரிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதனால் இரண்டு ஆண்டுகளாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படுவது தள்ளிப் போனது. இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா, நேபாள பர்லியின், பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சர் பால் கிருஷ்ணா காந்த் பேசியதாவது:நேபாள குடியுரிமை சட்டத்தில் உள்ள சில அம்சங்கள் காரணமாக, ஆயிரக்கணக்கானோர் குடியுரிமை சான்றிதழ் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோருக்கு குடியுரிமை இருந்தும் தங்களுக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லாமல், கல்வி உள்ளிட்ட அரசின் சலுகைகள் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக முதன் முறையாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்ப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.