நாடாளுமன்றத்தில் போராட்டங்கள் நடத்த தடை – எதிர்க்கட்சிகளுக்கு அடுத்த ஷாக்!

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை அடுத்து, நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும், உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புதிய பட்டியல் நேற்று முன்தினம் (ஜூலை 13) வெளியிடப்பட்டது.

இதில், நாடகம், வாய்ஜாலம், ஊழல், ஒட்டுக்கேட்பு, திறமையற்றவர், சர்வாதிகாரம், சகுனி உள்ளிட்ட பல வார்த்தைகள் அடங்கி உள்ளன. இந்த பட்டியலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக பொய் தகவல்களை கூறி வருவதாகவும், அவையின் மாண்புக்கு எதிரான வார்த்தைகள் மட்டுமே சபைக் குறிப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றன. அந்த நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பே தற்போது வெளியிடப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.

இந்நிலையில், “நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள் தர்ணா, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என எந்தவித போராட்டங்களுக்கும் இனி அனுமதி கிடையாது. அதே போல் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை” என நாடாளுமன்ற செயலாளர் பி.சி.மோடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் பட்டியல் சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், அடுத்த அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.