நீடித்த வளர்ச்சி இலக்கில் இந்தியா சாதனை: ஐ.நா., பாராட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நியூயார்க் : ‘மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் ‘நீடித்த வளர்ச்சி இலக்கு’ திட்டத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை செய்து, பிற நாடுகளுக்கு முன்னோடியாக விளங்குகிறது’ என,ஐ.நா., பாராட்டியுள்ளது.

கடந்த, 2015ல் குக்கிராமம் வரை மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை, 2030ல் அடைவதற்கான திட்டத்தை ஐ.நா., அறிவித்தது. இதற்கு, இந்தியா உட்பட, 195 நாடுகள் ஒப்புதல் அளித்தன.

இதன்படி, வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, நல்ல ஆரோக்கியம், பாலின சமத்துவம், துாய்மையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி, நியாயமான விலையில் பசுமை எரிசக்தி வழங்குதல், தொழில், கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட, 17 அம்சங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘நீடித்த வளர்ச்சி இலக்கில் முன்மாதிரி இந்தியா’ என்ற கருத்தரங்கம் ஐ.நா.,வில் நடந்தது. இதில், ஐ.நா., துணைத் தலைவர் அமினா முகமது பேசியதாவது:ஐ.நா.,வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கில், இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்துள்ளது. இதில் இந்தியா, இதர நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.

latest tamil news

இந்தியாவை பின்பற்றி இதர நாடுகளும் செயல் திட்டங்களை வகுத்து, 2030ல் நிர்ணயித்த இலக்கை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்திட்டத்தை கடைக்கோடி மனிதர்களுக்கும் இந்தியா எடுத்துச் சென்றுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், இந்தியாவில், 33 கோடி பேருக்கும் அதிகமாக கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டிருப்பது பிரமிக்க வைக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, மாவட்ட அளவில் மட்டுமின்றி குக்கிராமத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் திட்டத்தின் பயனை கொண்டு சேர்த்துள்ளன. இதற்கு, மத்திய அரசையும், ‘நிடி ஆயோக்’ அமைப்பையும் பாராட்டுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.