பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி

தஞ்சாவூர்
வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற உள்ளது.

பள்ளி அளவில் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெறுவோர் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பின் அதன் வெற்றியாளர்கள் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்பார்கள். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார்கள்.

செஸ் போட்டி

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு போட்டி குறித்து பயிற்சி அளிக்க ஏதுவாக தஞ்சை மாவட்ட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் போட்டிகள் முடிவடைகிறது. இந்த போட்டிகள் 1 முதல் 5 வகுப்புகள், 6 முதல் 8 வகுப்புகள், 9 முதல் 10 வகுப்புகள் மற்றும் 11, 12 வகுப்புகள் என நான்கு பிரிவுகளாக நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செய்து வருகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.