வரலாற்றிலும் இதிகாசங்களிலும் கூறப்படும் அச்சமூட்டும் சதியேற்றங்கள்; சதிக்கல்லின் வகைகள்!

கணவன் இறந்தவுடன் அவனின் மனைவிக்கு ஏற்படவிருக்கும் கொடுமையை எண்ணியோ அல்லது கணவனின் மேல் இருந்த காதலின் பொருட்டோ மனைவி சதி ஏறுவாள்.

இது அவளின் விருப்பப்படியோ அல்லது கட்டாயத்தின்படியோ நிகழும். இது குறித்த தகவல்கள் வரலாற்றிலும், இதிகாசங்களிலும் பல உண்டு. சதி என்பதை உடன்கட்டை ஏறுதல் என்றும் கூறுவது உண்டு.

சதி கற்கள்

சதி கற்கள் இரண்டு வகை எனலாம். கணவன் இறந்த பின் உயிர்விடும் பெண்ணுக்கு வைக்கப்படும் நடுகல் ஒருவிதம். கணவனுடன் வாழும் பெண்ணோ அல்லது கைம்பெண்ணோ தங்களின் கற்புக்கு பங்கம் நேரும்போது தீயில் விழுந்து உயிர்விட்ட பின்பு வைக்கப்படும் நடுகல் இரண்டாவது வகை. சதி கற்களில் வளையல் அணிந்த பெண் சிற்பம் இருந்தால் கணவனுடன் சேர்ந்து இறந்ததை குறிக்கும். தலையைச் சுற்றி நெருப்பு பறக்கும்படி சிற்பம் இருந்தால் அவள் தீயில் பாய்ந்து உயிர் விட்டதைக் குறிக்கும்.

இதிகாசக் குறிப்புகள்:

இலங்கை வேந்தன் ராவணனின் தந்தை குஷத்வஜா மாண்டதும் அவர் மனைவி வேதவதி சதியேறினார் என்கிறது வால்மீகி ராமாயணம். கண்ணனின் தந்தை வாசுதேவன் இறந்ததும் அவரின் மனைவிகளான தேவகி, பத்ரா, ரோகினி, மதிரா ஆகியோர் சிதையில் விழுந்து மாண்டனர். கிருஷ்ணர் இறந்ததும் அவரது மனைவியரான ருக்மணி, சைபியா, ஹேமாவதி, ஜம்பாவதி ஆகியோர் நெருப்பில் விழுந்து மாண்டனர். கந்தபுராணத்தில் சூரபத்மன் போரில் மாண்டதும் அவன் மனைவி பதுமகோமளை உயிர் விட்டாள் என்கின்றன இதிகாசங்கள்.

இலக்கியக் குறிப்புகள்:

பாண்டியரின் வடஎல்லை ஒல்லையூர் நாடு. (இன்றைய புதுக்கோட்டையிலுள்ள ஒலியமங்கலம்) அதனை சோழர் கைப்பற்றுகின்றனர். பாண்டியன் பூதப்பாண்டியன் போரிட்டு அதை வென்றான். ஆகவே “ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்” எனும் பெயர் பெற்றான். இவன் பெயரில் இன்றும் நாஞ்சில் பகுதியில் “பூதப்பாண்டி” எனும் ஊர் உள்ளது. இத்தகைய சிறப்புள்ள இம்மன்னன் போரில் இறக்கிறான். இவன் மனைவி பெருங்கோப்பெண்டு எனும் மாதரசி, இவள் கணவன் இறந்தவுடன் தீப்புக எண்ணுகிறாள். சுற்றத்தார் இவளை விடவில்லை. அரசன் இல்லா குறை நீங்க அரசாள வருமாறு கூற, அக்கூற்றினை ஏற்க மறுக்கிறாள். கணவன் இழந்தபின் பிணப்படுக்கையே மேல். எனக் கூறி தீப்புகுந்தாள். இதிகாசம் தவிர்த்து முதன்முதலாக சதியேற்றம் குறித்து வரும் தகவல் இது. மேலும் ஆய்வேளிர் அண்டிரன் இறந்ததும் அவன் மனைவி இறந்ததாய் புறநானூறு கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் ஆதிரை தீ புகுந்ததும் மீண்டதும் அறியலாம்.

உடன்கட்டை ஏறுதல்

வரலாற்றில் சதியேற்றம்:

ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இறந்ததும் அவரின் மனைவி வானவன்மாதேவி உடன்கட்டை ஏறினார். இதனை திருக்கோவிலூர் கல்வெட்டு கூறுகிறது. இராஜேந்திர சோழன் பிரம்மதேசத்தில் இறந்தபோது அவன் மனைவியருள் ஒருவரான வீரமாதேவி சதியேறி இறந்தார். மதுரை விஜயராக நாயக்கர், போரில் தோல்வியின் விளிம்பில் இருக்கும் தருவாயில், பகைவர் கையில் தன்மனைவியர் சிக்காமல் இருக்க அனைவரையும் தீயிலிட்டுக் கொன்றார். தேசிங்குராஜன் போரில் இறக்க, அவனது மனைவி சதியேறினார். இவளது தியாகத்தை மெச்சிய நவாப் “இராணிப்பேட்டை” என்ற ஊரையே ஏற்ப்படுத்தினார்.

சதிவழக்கம்:

மார்க்கோபோலோ தனது பயணக்கட்டுரையில் சதிவழக்கம் இந்தியா முழுவதும் அதிகம் இருந்ததென குறிப்பிடுகிறார். சதிவழக்கம் எவ்வாறு இருந்ததென போர்த்துகீசிய பயணி பெஃர்னோவா நூனிஸ் குறிப்பிடுகிறார். சாதாரண ஏழைகுடும்பப் பெண்கள் சதியேற விரும்புவதில்லை, ஆனால் சிதையில் அவர்களது உறவினர் பிடித்து தள்ளிவிட்டுவிடுவர். உயர்வகுப்பு பெண்ணாயிருப்பின் சிலசடங்குககள் செய்து அவளாகவே தீயில் விழும்படி ஏற்பாடு செய்வர், மங்கல வாத்யம் முழங்க, முழு ஒப்பனை செய்து, உயர்ந்த விலையுடைய ஆடையை அணிவிப்பர். பின்னர் தெருவில் ஊர்வலமாய் அழைத்து வந்து, சொத்துகளை அப்பொழுதே அவளது பிள்ளைகளுக்கு பங்கிட்டு, அதன்பின் சுடுகாட்டுக்கு அழைத்துவந்து ஒருகுழியில் இறங்கச்செய்து உடலெங்கும் எண்ணெய் பூசி மெழுகிய பின் தீயில் இறங்கச் செய்து மடியச் செய்வர் என மற்றொரு வெளிநாட்டு பயணியான பார்போசா, தான் கண்டதை கூறுகிறார். சிலபெண்கள் விதியை நொந்து உயிரிடுவர், சிலர் மரணபயம் காரணமாய் பின்வாங்கினால் வழுக்கட்டாயமாய் இழுத்து நெருப்பில் தள்ளப்படுவர். ஒரு பெண்ணுக்கு அவளது ஒழுக்கத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தால், அதை நீக்கும் பொருட்டும் அவள் தீயில் பாய்ந்து உயிர் விடுவது உண்டு.

சதியேற்றம்

இன்றும் சேலம் மாவட்டம் வட்டமுத்தான்பட்டி, மதுரை பேரையூர் அருகே உள்ள வே.சத்திரப்பட்டிக் கண்மாயில் உள்ள சிற்பம், என பல இடங்களில் சதிக் கற்கள் காணப்படுகின்றன. நாயக்கர் ஆட்சியில் ஏகப்பட்ட சதி நடுகற்கள் கிடைக்கின்றன. அதற்கு முன்னால் பல்லவர் காலம் முதல் கிடைத்தாலும் அருகியே கிடைக்கிறது. இன்றும் பல ஊர்களிலுள்ள “தீப்பாய்ந்தம்மன்” வழிபாடு உள்ளது. அவர்கள் இவ்வாறு சதியேறியவர்களே. இக்கொடிய வழக்கம் சட்டவிரோதமானது என்றும் தண்டனைக்குரிய குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டது. சமூக சீர்திருத்தவாதியான ராஜா ராம்மோகன் ராயின் உதவியுடன் வில்லியம் பெண்டிங் பிரபு இதற்கான சட்டத்தை வங்க மாகாணத்தில் கொண்டுவந்தார். பின்னர், 1830-ம் ஆண்டு இச்சட்டம் சென்னை, பம்பாய் மாகாணங்களுக்கும் அமலாகி சதி முறை ஒழிக்கப்பட்டது.

தொடரும்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.