Sri Lanka Crisis: இலங்கை புதிய அதிபர் யார்..? – 7 நாட்களில் முடிவு!

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்களில், புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என, நாடாளுமன்ற சபாநாயகர் தகவல் தெரிவித்து உள்ளார்.

அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள், மாளிகையை முழுவதுமாக தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே, அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய இருப்பதாக பிரதமர் அலுவலகம் உறுதி அளித்திருந்தது.

இதன்படி, இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே, நேற்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். கையெழுத்துடன் கூடிய ராஜினாமா கடிதத்தை, அவர் நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். போராட்டம் காரணமாக, மாலத்தீவு நாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே, தற்போது, சிங்கப்பூர் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். சிங்கப்பூர் நாட்டில் தரையிறங்கியதும், ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா – அடுத்த அதிபர் யார்?

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, “இலங்கையின் புதிய அதிபர் அடுத்த ஏழு நாட்களுக்குள் தேர்வு செய்யப்படுவார் என்றும், கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் முறையாக ஏற்கப்பட்டு உள்ளது” என்றும் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, இலங்கை நாடாளுமன்றத்தில், அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.