சட்டவிரோதமாக செயல்பட்ட ஸ்கேன் சென்டருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்ட நிலையில், கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில் ஈடுபட்ட 4 மருத்துவமனைகளின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்க சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து நலப்பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) பிரேமகுமாரி, வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் ஆகியோர் அடங்கிய குழுவினர் சுதா மருத்துவமனையில் 13 மணிநேரத்திற்கும் மேலாக ஆவணங்கள் மற்றும் ஸ்கேன் கருவிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கட்டுக்கட்டாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளில் இருந்த 10 ஸ்கேன் இயந்திரங்களை நான்கு அறையில் வைத்து சீல் வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த இணை இயக்குநர் (பொறுப்பு) பிரேமகுமாரி பேசும்போது… இரண்டு வார காலங்களுக்குள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தெரிவித்தார் .Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM