“தளபதி ஸ்டாலினுக்கு பின் உதயநிதிதான் முதல்வர்…” – சொல்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்

“விரைவில் அ.தி.மு.க பிளவுபடும்” என்று 2021-ல் ஜூ.வி-க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், அ.தி.மு.க-வில் நீண்ட காலம் பயணித்து இன்று தி.மு.க-வில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் தங்க தமிழ்ச்செல்வன். அது இன்று நடந்திருக்கிறது. இது குறித்தும், சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் அரசியல் எதிர்காலம்; தி.மு.க உட்கட்சி தேர்தல் போன்ற விஷயங்களை தனக்கே உரிய பாணியில் அதிரடி கலந்து கலகலப்பாக பகிர்ந்து கொண்டார்.

“திராவிட மாடல் பயிற்சி பாசறையின் இன்றைய அவசியம் என்ன?”

“திராவிடம் என்றால் என்ன என்பது இளைஞர்களுக்கு தெரிய வேண்டும். ஒரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தால்தான் பள்ளிக்கே போக முடியும். வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்றைக்கு அந்த நிலை இல்லை. அதை எல்லாம் ஒழித்து எல்லா மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சம உரிமை, சமூகநீதிக்கான உறுதி மொழியை தந்தது திராவிடம். அந்த உழைப்பு இப்போது இருக்கின்ற இளைஞர்களுக்கும் தெரிய வேண்டும். அதற்கான முயற்சியாக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அருமைச் சகோதரர் உதயநிதி ஏற்பாடு செய்து தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இந்த எழுச்சி பாசறைக் கூட்டத்தை நடத்தி வருகிறார்”

திருச்சி சிவா

“இத்தனை ஆண்டு காலம் இல்லாமல், பா.ஜ.க வளர்ந்து வரும் சூழலில் அதற்கு பயந்தா அல்லது காலத்தின் தேவைக்காகவா?”

“ஒரு கட்சிக்கு போட்டியாக கொண்டு வர வேண்டும் என்பது தி.மு.க-வின் எண்ணம் கிடையாது. எங்கள் இயக்கத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் வர வேண்டும். அவர்கள் திராவிடம் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டு, ஸ்ட்ராங்கான கேடராக பயணிக்க வேண்டும் என்பது எழுச்சி பாசறையின் நோக்கம். ஒன்றிய அரசை எதிர்க்க கூடிய வல்லமை தி.மு.க-விற்கு தான் இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதற்காக தான் இந்த முயற்சி”

“ஆனால், தி.மு.க மத்திய அரசை பார்த்து பயந்துள்ளதா? என்று கேட்க கூடிய அளவிற்கு தான் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்கிறது. மம்தா, சந்திர சேகர் ராவ் போன்றோர் வெளிப்படையாக பிரதமரையும், மத்திய அரசையும் எதிர்க்கிறார்கள். ஆட்சி பொறுப்பேற்ற பின் அந்த எதிர்ப்பு தி.மு.க-விடம் என்னவானது? என்கிற விமர்சனம் முன் வைக்கப்படுகிறதே”

“பாரத பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்து ரூ 32,000-க்கு திட்டம் துவங்கி வைத்தார். அந்த கூட்டத்தில் எந்த மாநில முதல்வரும் கேட்காத கேள்வியை தமிழ்நாடு முதல்வர் அண்ணன் தளபதி கேட்டார். ஜி.எஸ்.டி வரி பாக்கி, தேசியக் கல்வி கொள்கை, நீட் தேர்வு,… போன்ற விவகாரங்களை நேரடியாக மேடையில் முன்வைத்தார். சிறப்பாக ஆட்சி நடத்துவதோடு மட்டுமின்றி, தமிழ் நாட்டின் உரிமையை பாரத பிரதமரிடம் முறையிட்டார். இதைவிட வேறு எப்படி செயல்பட வேண்டும்?”

மோடி, ஸ்டாலின்

“முதல்வர் ஆட்சியை பார்த்து கட்சியை விட்டுவிட்டார்’ என்று கட்சியினரே புலம்புகிறார்களே…?”

“பெரிய கட்சி தி.மு.க. பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்திருக்கிறது. தளபதி எல்லா விஷயத்தையும் பொறுமையாக கையாண்டு, எதிலும் தவறு, பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் போது சிலர் ‘எனக்கு அது கிடைக்கல, இது கிடைக்கல’ என்று சொல்வது இயல்பு. ஆட்சி – கட்சி இரண்டுமே சிறப்பாக இருக்கிறது”

“இருந்தும்… தி.மு.க உட்கட்சி தேர்தலில் குழப்பம் நீடிக்கிறது, இதனால் அறிவாலையத்திற்கு அணிகள் படையெடுக்கிறார்கள் என்கிறார்களே!”

“நடவடிக்கையோ, செயல்பாடோ இல்லாமல் இருக்கிற சிலரின் பொறுப்புகளை எடுப்பது இயற்கையான ஒன்று. அவர்களில் சிலர் அறிவாலயத்திற்கு வருவது, சில கோரிக்கைகள் தலைமை கழகத்தில் வைப்பதும் உண்மை. நிர்வாக வசதிக்காக சில ஒன்றியங்கள் மாவட்ட செயலாளர் பரிந்துரையின் பெயரில் பிரிக்கப்படுகிறது. அவர்கள் ஆய்வு செய்து பெரிய ஒன்றியமாக இருப்பின் பத்து, பத்து ஊராட்சிகளாக இருந்தால் பிரித்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். அப்படி பிரிக்கும் போது சில பிரச்னைகள் இருக்கும். இது தொடர்பாக தலைமை கழகத்தில் கட்சிக்காரர்களோடு பேசுவது இயல்பான ஒன்று. இது எல்லாக் கட்சியிலும் இருக்கும்.”

அண்ணா அறிவாலயம்

“அ.தி.மு.க-வில் பயணித்திருக்கிறீர்கள். இன்று அங்கு நடக்கும் விவகாரங்களை எப்படி பார்க்கிறீர்கள்?”

“நான் தி.மு.க வந்து மூன்று வருடம் ஆகிறது. இப்போது அ.தி.மு.க-வை விமர்சிப்பது நல்லா இருக்காது. இருந்தாலும் சொல்கிறேன். தலைமை பண்பு அம்மாக்கு பிறகு அங்கு யாரிடமும் இல்லை. ஆட்சி அதிகாரம் கிடைத்தால் எந்த திறமையும் இல்லாதவன் கூட அதிகாரம் பண்ண முடியும். ஆட்சி போன பிறகு மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்து தோல்வி. கட்சியை ஸ்டடி பண்ண முடியவில்லை. காரணம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உட்பட அங்கே யாரிடமும் உண்மை இல்லை. அந்த அம்மாவிடம் நடித்து நடித்தே காலத்தை ஓட்டியவர்களால், இப்போது சுயமாக நடக்கக்கூட முடியவில்லை. ஓ.பி.எஸ்-ஸின் சொந்த மாவட்டத்திலேயே எல்லோரும் எடப்பாடி பக்கம் போகிறார்கள். மக்களையும், தொண்டனையும் விட்டு விட்டு ஓ.பி.எஸ் குடும்பம் மட்டும் செல்வ செழிப்பாக இருக்கிறது. எனவே ‘யாருக்கும் புரோஜனம் இல்லை பன்னீர் செல்வத்தால்’ என்று இ.பி.எஸ் பக்கம் போகிறார்கள். இது தான் இன்றைய நிலை. தலைமை பண்போடு யாரும் கட்சியை வளர்க்க நினைக்கவில்லை. எடப்பாடி பணத்தை விடுகிறார். எல்லோரும் போகிறார்கள். இது தான் செய்தி.”

பன்னீர் – எடப்பாடி

“மாற்றொரு பக்கம் டி.டி.வி, சசிகலா அ.தி.மு.க-வின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் வருவார்கள்’ என்கிறார்களே!”

“அவர்களுக்கான அரசியல் எதிர்காலம் என்பது எனக்கு தெரிந்து இல்லை. மக்கள் இனி ஏற்று கொள்ள மாட்டார்கள். எல்லாமே ஆலோசனை இல்லாத, தவறான முடிவு. பா.ஜ.க-வை எதிர்த்து அவர்களால் அரசியல் பண்ண முடியாது. பா.ஜ.க-வுக்கு அடிபணிந்து தான் போக வேண்டும். இது தான் நிலைமை”

சசிகலா , தினகரன்

“அதிகார தொனியில் இ.பி.எஸ், ஜனநாயக ரீதியா ஓ.பி.எஸ் போராடுகிறார் என்கிறார்களே”

“இதற்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. மக்களுக்கும், அந்த கட்சியில் இருப்பவர்களுக்கும் தெரியுமே”

“தி.மு.க-வில் இணைந்த மாற்று கட்சியினர் இன்று பல பொறுப்புகளும், செல்வாக்கும் செலுத்தி வருகின்றனர். தங்களுக்கு தேர்தல் தோல்வியினால் அது சாத்தியமில்லாமல் போனதா? அல்லது அரசியல் காரணங்கள் வேறு ஏதும் உண்டா?”

“செந்தில் பாலாஜியை சொல்றீங்க…(சிரிக்கிறார்) மக்கள், கட்சியினரிடம் எப்படி அணுகனுமோ அப்படி அணுகி எல்லா அமைச்சர்களும் சிறப்பா, பொறுப்பா செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதில் செந்தில் பாலாஜியும் ஒருவர். கட்சி ரீதியாக அவர் மாவட்ட பொறுப்பாளர். உள்ளாட்சியில் நூறு சதவீதம் வெற்றி பெற்றோம். இதுவரை இல்லாமல் பெரியகுளம், போடி, தேனி, கம்பம், சின்னமனூர், கூடலூர் ஆகிய ஆறு நகராட்சிகளில் வென்றுள்ளோம். 22 பேரூராட்சியில் 21 பேரூராட்சி எடுத்திருக்கிறோம். இது பெரிய விஷயம் தானே. அ.தி.மு.க கோட்டை என்று சொல்லக் கூடிய இடங்களை எல்லாம் உடைத்திருக்கிறோம். உடைத்ததற்கு காரணம் எங்கள் உழைப்பு மட்டும் கிடையாது, தமிழ்நாடு முதல்வர் அண்ணன் தளபதியின் செயல்பாடு, திட்டங்கள். மக்களுக்கு பிடித்திருக்கு. உதயசூரியனை வரவேற்கிறார்கள்”

செந்தில் பாலாஜி

“அப்படி இருந்தும் தி.மு.க மீது ‘செய்தி அரசியலாக தான் இருக்கிறது, செயல் அரசியல் இல்லை’ என்று விமர்சனம் முன்வைக்கப்படுக்கிறதே”

“21 மாநகராட்சியில் தி.மு.க ஜெயிக்கிறது என்றால் செயல்பாடு இல்லாமல் எப்படி?”

“அதற்கும் பணம் செலவழிக்கப்பட்டது என்பது வதமாக இருக்கிறதே?”

“வேலுமணி, தங்கமணி, பழனிசாமி, பன்னீர் செல்வம் எல்லோரும் தான் செலவு செய்ததாக சொல்கிறார்கள். அவர்களால் ஜெயிக்க முடிந்ததா? பணம் எல்லாத்துக்கும் பதில் சொல்லாது. நம்ம உழைப்பை, திட்டங்களை காட்ட வேண்டும்”

ஓ.பி.எஸ் – தங்க தமிழ்ச்செல்வன்

“ஓ.பி.எஸை ஓரங்கட்டி, அங்கு கட்சியை வளர்க்க சரியான ஆள் நீங்கள் தான் என்று இ.பி.எஸ் தரப்பு தங்களிடம் பேசினார்களாமே?”

“அப்படி எல்லாம் இல்லை… இப்போது சரியான தலைமை பண்பு, மனிதாபிமானம் உள்ள தலைவரிடம் இருப்பதில் பெருமை படுகிறேன். பதவிக்காகவோ, பணத்திற்காகவோ தங்கத் தமிழ்ச்செல்வன் என்றைக்கும் போக மாட்டான். இங்கு நல்ல மதிப்பு, மரியாதைக் கொடுக்கிறார். ஒரு மாவட்ட செயலாளர் பொறுப்பு. அழகா செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதை பொறுத்து கொள்ளாமல் கண்ணை உறுத்தி என்னை பற்றி தவறான செய்தி பரப்புகிறார்கள். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறேன்”

“வருங்கால திமுக, உதயநிதியின் வருங்காலம் உங்கள் மதிப்பீடு?”

“வருங்கால தி.மு.க, உதயநிதி தி.மு.க என்பது எல்லாம் இரண்டாவது. எனக்கு தெரிந்து தளபதியின் உழைப்பை பார்க்கும் போது தொடர்ந்து தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெறும். தளபதி தான் முதலமைச்சராக வருவார். அவருக்கு பின்னால் நிச்சயம் உதயநிதி தான் வருவார்”

உதயநிதி

“தி.மு.க-வில் உதயநிதி தவிர திறமையான வேறு ஆட்கள் இல்லையா?”

“வேறு ஆட்கள் இருக்கிறார்கள்… இன்று இளைஞர் அணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு மக்களுக்கும் தெரிந்த முகமாக இருக்கிறார்”

“எத்தனையோ அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தெரிந்த முகமாக தி.மு.க-வின் அடையாளமாக இருக்கிறார்கள் தானே”

“இருக்கட்டும்… வாரிசு அரசியல் வைத்து தவறு செய்தால் அதை மக்கள் வெறுப்பார்கள். வாரிசு அரசியல் மூலமாக மக்களுக்கு நல்லது செய்தால் அமோகமாக வரவேற்பார்கள். உதயநிதியின் செயலுக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி ஒரு எடுத்துக்காட்டு. தெருத்தெருவாக போய் நடந்து திட்டங்கள் பார்க்கிறார். அங்கு அமோக வரவேற்பு இருக்கிறது. சீக்கிரம் தமிழ்நாடு முழுவதும் அந்த வரவேற்பு இருக்கும். சட்டமன்ற உறுப்பினர் என்றால் இப்படித்தான் இருக்கணும்”

உதயநிதி, ஸ்டாலின்

“மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அப்படி இல்லையா?”

“இருக்கங்க… வாரிசு அரசியல் என்பதற்காக சொல்கிறேன். அவர் வீட்டில் இல்லை. ஜெயித்த ஆள் மக்களோடு மக்களாக இருந்து நல்ல பொறுப்பாளராக இருக்கிறார் என்பதை தெரியப்படுத்துகிறேன். அடுத்த முதல்வர் எப்போது நடக்க போவது என்பது இரண்டாவது. எனக்கு தெரிந்து தொடர்ந்து தளபதி தான் முதல்வராக இருப்பார். அவருக்கு பின்னாடி பார்ப்போம். அதை ஏன் இப்பவே போட்டு கிண்டுகிறார்கள். தான் அடுத்த முதல்வர், அமைச்சர் என்பதையெல்லாம் என்கரேஜ் பண்ண கூடிய நிலையிலும் உதயநிதி இல்லை. ரொம்ப பக்குவமா, கண்டிப்பா இருக்கிறார். தவறு நடக்க கூடாது என்பதில் 100% உறுதியாக இருக்கிறார்”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.