தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் அரசு முழுவீச்சில் செய்துவருகிறது. இந்தப் போட்டிக்காக 188 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் 18 குழுக்கள் இந்த விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துவருகிறது.
இந்தப் போட்டிக்கான விளம்பர பாடலை தமிழ்நாடு அரசு தயாரித்துள்ளது. அதில் வரும் பாடலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த பாடலின் டீசரை சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இதில், சென்னை நேப்பியர் பாலத்தில் சதுரங்கப் பலகையைப் போலவே கருப்பு – வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது. அதில் முதல்வர் ஸ்டாலின் நடந்துவரும் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன.
தற்போது, இந்த பாலம் செஸ் போர்டு போல வண்ணம் பூசப்பட்டிருப்பது பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அங்கு செல்லும் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அதே வேளையில், இந்த வழியாக வாகனங்களில் செல்லும் மக்கள் சிலர், தலைச்சுற்றல் போன்ற ஒருசில அசௌகரியங்களை உணர்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நரம்பியல் மருத்துவர்களிடம் பேசினோம். “பழைய திரைப்படத்தில் வருவதுபோல, ஒரு சில சூழல் ஓவியங்கள், ஒளி விளக்குகளால், எபிலெப்டோஜெனிசிஸ் (epileptogenesis) என்னும் கை, கால் வலிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலானவர்களுக்குக் கண்டிப்பாக எந்த ஒரு பிரச்னையும் இருக்காது. ஒரு சிலருக்கு மட்டும் இது போன்ற பிரச்னை ஏற்படலாம். ஏற்கெனவே எபிலெப்ஸி (epilepsy) பிரச்னை உள்ளவர்கள் மட்டும் அந்த பாதையைத் தவிர்ப்பது நல்லது” என்கிறார்கள்.