'நான் குற்றவாளி அல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்' – அரவிந்த் கெஜ்ரிவால் ஆதங்கம்!

தான் குற்றவாளி அல்ல என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்றும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூர் நாட்டில் இம்மாத இறுதியில், உலக நகரங்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும்படி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கடந்த ஜூன் மாதம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதை ஏற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதி அளித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து, உலக நகரங்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல அனுமதிக் கோரி மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த அனுமதியும் வரவில்லை எனத் தெரிகிறது. இதற்கிடையே நேற்று, இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் இன்று, செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்காததற்கு பின்னணியில், அரசியல் இருக்கிறது. நான் ஒரு குற்றவாளி இல்லை. மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். சிங்கப்பூர் நாட்டில் நடைபெற உள்ள உலக நகரங்கள் மாநாட்டில் கலந்து கொண்டால் அது நாட்டிற்கு பெருமைக்குரிய விஷயம்.

நான் ஏன் உச்சி மாநாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பது எனக்கே புரியவில்லை. இந்த பயணம் இந்தியாவிற்கு மேலும் பெருமையை மட்டுமே கொண்டு வரும் என்று நான் நினைக்கிறேன். நாட்டின் உள் வேறுபாடுகள் உலக அரங்கில் பிரதிபலிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.