வாசகர்களுக்கு வணக்கம் : இலவசங்கள் வேண்டுமா, வேண்டாமா?

நம் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவரும் ‘இலவசங்கள்’ குறித்த விவாதம், தற்போது தீவிரமடைந்திருக்கிறது. ‘இலவசங்களால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிடும்’ என்ற கருத்தை சமீபகாலமாக மத்திய அரசு ஒலித்துவருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இலவசங்களுக்கு எதிரான கருத்தை முன்வைத்திருக்கிறார். அவர், ‘ஓட்டுகளைப் பெறுவதற்காக இலவசப் பொருட்களை வழங்கும் அரசியல் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பாக, மத்திய அரசில் முக்கியப் பதவிகளை வகிக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பிரதமர் மோடியைச் சந்தித்து சில கருத்துகளை வலியுறுத்தினர்.

Modi

அப்போது, இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை அளிக்கும் போக்கு பல மாநிலங்களிலும் காணப்படுகிறது என்று பிரதமரிடம் எடுத்துரைத்த அதிகாரிகள், இத்தகைய போக்கு அதிகரித்தால் இலங்கையைப் போன்ற சூழல் இந்தியாவில் ஏற்படும் என்று எச்சரித்தனர். அதன் தொடர்ச்சியாகவே, இலவசங்களுக்கு எதிரான கருத்தை பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், உத்தரப் பிரதேசத்தில் நின்று கொண்டு பிரதமர் மோடி இந்தக் கருத்தைப் பேசியிருப்பதுதான். மேலும், இந்தக் கருத்தை எதிர்க்கட்சிகளை நோக்கி விமர்சனமாகவும் பிரதமர் முன்வைத்திருக்கிறார். கொரோனா காலத்தில் உ.பி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கியதையே தனது முக்கிய சாதனைகளில் ஒன்றாக அம்மாநில பா.ஜ.க அரசு குறிப்பிட்டு ஓட்டு கேட்டது. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இலவச லேப்டாப், இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், இலவச ஸ்கூட்டர் உட்பட பல வாக்குறுதிகளை பா.ஜ.க முதல்வரான யோகி ஆதித்யநாத் அள்ளி வீசினார்.

Yogi Adityanath

தமிழகத்தில் தி.மு.க., டெல்லியில் ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் உட்பட பல மாநிலங்களில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் கட்சிகள், தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி பல இலவசத் திட்டங்களை நிறைவேற்றிவருகின்றன. சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவையாகவும் இருக்கின்றன. இந்த நிலையில்தான், இலவசங்களுக்கு எதிரான கருத்தை மத்திய அரசின் அதிகாரிகளும் பிரதமரும் முன்வைத்திருக்கிறார்கள். இலவசங்கள் மோசம், இலவசங்கள் தேவையற்றது, இலவசங்கள் ஆபத்து என்கிற ரீதியில் ஒரு பிரசாரமாக முன்னெடுக்கப்படும், இந்தக் கருத்து சரியானதா என்கிற விவாதமும் அவசியப்படுகிறது.

இலவசத் திட்டங்களுக்கு முன்னோடி என்று தமிழ்நாட்டைச் சொல்லலாம். குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு வரவழைப்பதற்காக சத்துணவுத்திட்டம் கொண்டுவரப்பட்டது. கல்வியில் தமிழ்நாடு முன்னேறியதற்கு, இலவசமாக வழங்கப்பட்ட உணவுதான் முக்கியக் காரணியாக இருந்தது. பிற்காலத்தில் இந்த மதிய உணவுத் திட்டமே இந்தியா முழுக்க அமல்படுத்தப்பட்ட திட்டத்துக்கு முன்மாதிரியாக அமைந்தது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வழங்கப்பட்ட இலவச மடிக்கணினிகள் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு அடித்தளமிட்டது.

இலவசத் திட்டங்கள்

அதே நேரத்தில் இலவச கிரைண்டர், இலவச மிக்ஸி, இலவச வண்ணத் தொலைக்காட்சி போன்ற திட்டங்கள் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகின.
‘இலவசங்களே மோசம்’ என்று பொத்தாம் பொதுவாகப் பேசுவது சரியல்ல. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருக்கும் நம் தேசத்தில், சமூக வளர்ச்சிக்குத் தேவையான இலவசத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அதே நேரத்தில், வாக்குகளைக் கவர வேண்டும் என்ற நோக்கத்துடன், குழந்தைகளுக்கு சாக்லேட்டைக் காட்டி ஏமாற்றுவதைப் போல, சமூகத்துக்குப் பயனளிக்காத ஜிகினா வாக்குறுதிகள் தேவையற்றவை. எனவே, இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசங்களைப் புரிந்துகொண்டு, இலவசத்திட்டங்களை ஆட்சியாளர்கள் அணுக வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.