அதிமுக தலைமை அலுவலகம் அருகே மோதல்: இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு  நிபந்தனை ஜாமீன்

சென்னை: கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேருக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11-ம் தேதி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் மீது ராயப்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் கலவரத்தை தூண்டுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பாசறை பாலசந்திரன் உட்பட 14 பேர் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோதண்டராஜன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதமதிப்பின் ஒரு பகுதியை நாங்கள் தரத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜாமீன் வழங்கினால் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரர்கள் அனைவரும் 15 நாட்களுக்கு பொன்னேரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.