குரங்கு அம்மை: கேரளாவில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு; மருத்துவமனைகளில் தயாராகும் தனிமை வார்டுகள்!

கொரோனா நோய்த்தொற்றைப் போன்று குரங்கு அம்மை நோயும் இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் பரவியுள்ளது. கடந்த 12-ம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் கேரளா வந்த கொல்லத்தைச் சேர்ந்த 35 வயதுள்ள இளைஞருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. அவரது மாதிரிகள் புனேயில் உள்ள மத்திய வைராலஜி இன்ஸ்டிட்யூட் பரிசோதனை கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு கடந்த 14-ம் தேதி முடிவு வெளியானது. அந்த முடிவு வெளியான பிறகே அவருக்கு குரங்கு அம்மை பாதித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அவருடன் விமானத்தில் வந்த 11 பேர், அவரின் குடும்பத்தினர் மற்றும் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து அவரை கொல்லத்துக்கு காரில் அழைத்துச் சென்ற டிரைவர் உள்ளிட்டவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

பரிசோதனை

இதையடுத்து கேரளாவின் அனைத்து விமான நிலையங்களிலும் குரங்கு அம்மை நோய் பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பயணிகள் தனித்தனியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இருந்து கடந்த 13-ம் தேதி கேரளா வந்த கண்ணூரைச் சேர்ந்த 31 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை நோய் பாதித்து இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. அவர் பரியாரம் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் கொரோனா நேரத்தில் கேரளாவில் ஏற்படுத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மையங்களை குரங்கு அம்மை ஆய்வுக்கூடங்களாக மாற்ற கேரள சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதுபற்றி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “கொரோனா காலக்கட்டத்தில் கேரளத்தில் அரசு சார்பில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்காக 28 ஆய்வுக் கூடங்கள் ஏற்படுத்தப்படிருந்தன. அதில் முதற்கட்டமாக ஆலப்புழாவில் உள்ள ஆய்வுக்கூடம் குரங்கு அம்மை நோய்க்கான சாம்பிள்கள் பரிசோதனை செய்யும் பரிசோதனை நிலையமாக மாற்றப்படும். அதற்காக புனேயில் உள்ள மத்திய ஆய்வுக்கூடத்தில் இருந்து கிட்கள் உடனடியாக வரவழைக்கப்படும். மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பை தொடர்ந்து மத்திய சுகாதார குழுவினர் கடந்த மூன்று நாள்களாக நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இறுதியாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது கேரளாவில் குரங்கு அம்மை நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்ததாக சுகாதாரத்துறை அமைச்சரின் செய்திகுறிப்பில் கூறப்படுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.