`வாடிவாசல்' அப்டேட்: சூர்யாவின் பிறந்தநாளுக்கு வெற்றிமாறன் கொடுக்கும் ஸ்பெஷல் கிஃப்ட்! | Exclusive

வெற்றிமாறன் இப்போது `விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து அவர் `அதிகாரம்’, `இறைவன் மிகப்பெரியவன்’ ஆகிய படங்களுக்கு கதை எழுதியுள்ளார். விஜய் சேதுபதியின் `விடுதலை’யை அடுத்து சூர்யாவின் ‘வாடி வாசல்’ படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் அப்டேட் குறித்து விசாரித்தோம்.

சூர்யா இப்போது பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் சிவாவின் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களும் முடிந்த பிறகே ‘வாடிவாசல்’ பக்கம் செல்வார் எனத் தெரிகிறது. ஜல்லிக்கட்டைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்துக்காகச் சில மாதங்களுக்கு முன்னர் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்றை அமைத்திருந்தனர். அதில் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட மாடுபிடி வீரர்களுடன் சூர்யாவும் பங்கேற்ற டெஸ்ட் ஷூட் காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்தப் படப்பிடிப்பைக் காண சூரியும் வந்திருந்தார்.

வெற்றிமாறன்

‘வாடிவாசல்’ படத்திற்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக சூர்யா இரண்டு காளைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஈ.சி.ஆர் ரோட்டில் எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட் சிறப்பாக வந்திருப்பதால் அதனை சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டிருக்கிறார். சூர்யாவின் பிறந்தநாள் வருகிற 23ம் தேதி வருகிறது. அன்று, இந்த டெஸ்ட் ஷூட்டின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகலாம் என்கிறார்கள்.

தாணு தயாரிக்கும் ‘வாடிவாசல்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இயக்குநர் அமீர் இதில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இவர்கள் தவிர, மதுரை அலங்காநல்லூரியில் உள்ள நிஜ மாடுபிடி வீரர்கள் பலரும் நடிக்கின்றனர். அநேகமாக இந்த ஆண்டு இறுதியில் இதன் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.