தமிழ் இயக்குனர்களை நம்பி ஏமாறும் தெலுங்கு ஹீரோக்கள்

தமிழ் சினிமாவிற்கும், தெலுங்கு சினிமாவிற்கும் நிறையவே ஒற்றுமைகள் உண்டு. இரண்டு மொழிகளிலும் பொதுவாக நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பலர் இருக்கிறார்கள். பெரிய அளவில் கலாச்சார வித்தியாசமும் இல்லை. இரண்டு மொழி சினிமாவிலும் இரண்டு மொழிக் கலைஞர்களும் மாறி மாறி வேலை பார்க்கிறார்கள். இப்படி சில விஷயங்களைச் சொல்லலாம்.

தமிழ் ஹீரோக்கள் இப்போதுதான் தெலுங்கு சினிமா பக்கம் நேரடியாக அறிமுகமாக வேண்டும் என சில படங்களில் நடித்து வருகிறார்கள். அதே போல சென்னையில் பிறந்து, வளர்ந்த நன்றாக தமிழ் பேசத் தெரிந்த, சில தெலுங்கு ஹீரோக்களுக்கு தமிழில் அறிமுகமாக ஆசை.

அப்படி சில வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'ஸ்பைடர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான மகேஷ் பாபு. படம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் படுதோல்வி அடைந்தது. அடுத்து தெலுங்கின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொன்டா, தமிழ் இயக்குனரான ஆனந்த் சங்கர் இயக்கிய 'நோட்டா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படமும் தோல்வியே.

தற்போது மற்றொரு இளம் முன்னணி நடிகரான ராம் பொத்தினேனி, தமிழ் இயக்குனரான லிங்குசாமி இயக்கத்தில் 'வாரியர்' படம் மூலம் இங்கு அறிமுகமானார். படம் இரண்டு மொழிகளிலும் சேர்த்து சுமார் 50 கோடி நஷ்டத்தைத் தரும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி தமிழில் அறிமுகமாக வேண்டும் என்று ஆசைப்பட்ட மூன்று ஹீரோக்களும் தோல்வியையே தழுவியுள்ளனர். அடுத்து தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படம் உருவாகி வருகிறது. நல்ல வேளையாக இந்தப் படத்தை தெலுங்கில் மட்டுமே தயாரிக்கின்றனர். இருப்பினும் தமிழ் இயக்குனர்கள் – தெலுங்கு ஹீரோக்களின் மோசமான ராசியை இந்தக் கூட்டணி உடைக்குமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.