6,892 ஏக்கர் நிலம் முறைகேடாக விற்பனை: தமிழக பதிவுத் துறை அதிகாரிகள் 9 பேர் சஸ்பெண்ட்!

சென்னை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் 6,892 ஏக்கர் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. முன்னதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு இந்த சொத்துக்களை பதிவு செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

நில மோசடி குறித்த விவரங்களை அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று வெளியிட்டார். மேலும், இதில் பதிவுத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார்.

இந்தநிலையில், போலி ஆவணங்கள் மூலம் 5,300 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில், உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட 6,892 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் பதிவுத் துறையைச் 63 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள 38 சார்-பதிவாளர் அலுவலகங்களில் இந்தப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையடுத்து ஒன்பது அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 54 அதிகாரிகள் மீது 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரி மற்றும் பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.