India Next President: அடுத்த குடியரசு தலைவர் யார்? – நாளை வாக்கு எண்ணிக்கை!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்திய திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள், நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாக்கு அளித்தனர். இதே போல், மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள தலைமைச் செயலகத்தில், மாநில முதலமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

இதை அடுத்து, வாக்குப் பதிவு முடிந்த நிலையில் அன்று மாலையே வாக்குப் பெட்டிகள் தனி விமானம் வாயிலாக டெல்லிக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முடிவுகள் உடனே அறிவிக்கப்படும் என்பதால், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது நாளை மதியத்துக்குள் தெரிந்து விடும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவுக்கு, அதிக வாய்ப்பு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.