இளைய தலைமுறையினரின் கருத்துக்கள் ஆராயப்பட வேண்டும்.
அதேபோன்று அவர்கள் முன்வைக்கும் தற்போதைய மாற்றத்திற்கான அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு எதிர் அணிகளின் கடந்தகால ஆட்சி முறை நாட்டை நிலைகுலைய வைத்துவிட்டது எனவும் கூறினார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஏன் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என நம் நாட்டு இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், அதற்கிணங்க நாட்டை கட்டி எழுப்ப அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் எனவும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் புதிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், மக்கள் போராட்டம் என்ற போர்வையில் வீடுகளை எரிப்பதும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை கைப்பற்றுவதும் ஜனநாயகம் அல்ல எனவும் இது சட்டத்திற்கு முரணானது எனவும், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்..