காலை வாரிய கூட்டணி இத்தாலி பிரதமர் ராஜினாமா| Dinamalar

ரோம்:நம்பிக்கை ஓட்டெடுப்பை கூட்டணி கட்சிகள் புறக்கணித்ததால், இத்தாலி பிரதமர் மரியா திராகி பதவியை ராஜினாமா செய்தார்.
ஐரோப்பிய நாடான இத்தாலி பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பு நிதியத்தின் உதவியுடன், கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்ய, இத்தாலி பிரதமர் மரியா திராகி முயன்றார். அத்துடன், அடுத்த ஆண்டு வரையிலான ஆட்சிக் காலம் வரை, கூட்டணி அரசு தொடர ஆதரவு தருமாறு கோரினார். ஆனால், கூட்டணியை சேர்ந்த மூன்று கட்சிகள், பிரதமரின் திட்டங்களுக்கு ஆதரவளிக்க மறுத்தன. கூட்டணி கட்சிகளின்சில யோசனைகளை செயல்படுத்த மரியா திராகி மறுத்தார்.
இதனால், கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த வாரம் இத்தாலி பார்லி.,யில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மசோதாவுடன், நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானமும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானம் மீதான ஓட்டெடுப்பை, கூட்டணியைச் சேர்ந்த மூன்று கட்சிகள் புறக்கணித்தன.
இதையடுத்து, மரியா திராகி, தன் ராஜினாமா கடிதத்தை, இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரல்லாவிடம் கொடுத்தார். அதை ஏற்க மறுத்த அவர், ஆட்சியை தொடரும்படி கூறினார். இதையடுத்து, மரியா திராகி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த முறையும், கூட்டணி கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.
அதனால், மரியா திராகி, அதிபர் செர்ஜியோ மட்டரல்லவை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இந்த முறை, அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட செர்ஜியோ, தற்காலிக பிரதமராக நீடிக்கும்படி, மரியா திராகியை கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, விரைவில் பொதுத் தேர்தல் அறிவிப்பை அதிபர் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.