குடியரசு தலைவராகிறார் திரவுபதி முர்மு?.. பாஜக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை..!

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக கூட்டணி சார்பில், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நடந்தன. இந்த தேர்தலில் 771 எம்பிக்கள் மற்றும் 4025 எம்எல்ஏக்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், 99 சதவீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. இந்நிலையில், நாட்டின் 15வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. முதலில்  எம்பிக்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. அகர வரிசைப்படி 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை ராஜ்யசபா பொதுச்செயலாளர் பிசி மோடி அறிவித்தார். அதன்படி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு அதிக வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்தார். இந்நிலையில் 2ம் சுற்று முடிவுகள் வெளியானது. அதிலும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 2வது சுற்று முடிவில், திரவுபதி முர்மு 4,83,299 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 1,89,000 வாக்குகளும் பெற்றுள்ளனர். சற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது. வரும் 23ம் தேதி தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரியாவிடை அளிக்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். 25ம் தேதி புதிய குடியரசு தலைவர் பதவியேற்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.