நீட் தேர்வு: மாணவிகளின் உள்ளாடையை அகற்ற உத்தரவிட்ட தேர்வு மைய பொறுப்பாளர்கள் இருவர் அதிரடி கைது!

கேரள மாநிலம் கொல்லம் ஆயூரில் உள்ள மார்தோமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டரில் கடந்த 17-ம் தேதி நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தேர்வு ஹாலுக்கு அனுமதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உலோகத்தால் ஆன ஆடைகள் அணிந்து செல்லக்கூடது என விதிமுறை உள்ளது. ஆனால், பிராவில் பிளாஸ்டிக் ஹூக் வைத்திருந்த மாணவிகளிடமும் உள்ளாடையை அகற்றச்சொல்லியுள்ளனர். உள்ளாடைகளை அகற்றிய பின் மாணவிகள் தேர்வு ஹாலுக்குள் அமர்ந்து கூனிக்குறுகி தேர்வு எழுதியதாக குமுறலுடன் கூறியிருந்தனர். தேர்வு எழுதிய பிறகு தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல முடியாமலும், இருட்டு அறைக்குள் குவிந்துகிடந்த உள்ளாடைகளை தேடி எடுக்க முடியாமலும் மாணவிகள் கதறி அழுத சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாணவிகள், தங்கள் அம்மாக்களிடம் துப்பட்டாவை வாங்கி அணிந்துகொண்டு வீட்டுக்குச் சென்ற அவல நிலை ஏற்பட்டது.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்

தேர்வு மையத்தில் உள்ளாடைகளை அகற்றச் சொன்ன விவகாரம் குறித்து மாணவிகளின் பெற்றோர் கொல்லம் ரூரல் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இதுபற்றி தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த மனித உரிமை கமிஷன் இதுபற்றி விசாரணை நடத்தி 15 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி கொல்லம் ரூரல் எஸ்.பி-க்கு உத்தரவிட்டது. மாணவிகள் தரப்பில் இருந்து ஐந்து புகார்கள் காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றச்சொன்ன 5 பெண் அதிகாரிகள் மீது கொல்லம் மாவட்டம் சடையமங்கலம் காவல் நிலையத்தில் பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மார்தோமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள், தேர்வு பணிக்காக வந்த என்.டி.ஏ ஏஜென்சியை சேர்ந்த மூன்று பேர் என ஐந்து பெண் ஊழியர்களை போலீஸார் ஏற்கெனவே கைது செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து மாணவிகளின் உள்ளாடை அகற்றப்பட்ட விவகாரத்தின் உண்மைத்தன்மை குறித்து என்.டி.ஏ குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

கைது

என்.டி.ஏ குழுவினர் ஒருபுறம் விசாரணை நடத்திவரும் நிலையில், தேர்வு நடத்தும் பொறுப்பில் இருந்த என்.டி.ஏ அப்சர்வர் டாக்டர் ஷாம் நாத், தேர்வு மைய ஒருங்கிணைப்பாளர் பிரிஜி குரியன் ஐசக் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஆயூர் மார்த்தோமா கல்லூரியின் நீட் தேர்வு நடத்தும் பொறுப்பாளர் மற்றும் இணைப் பொறுப்பாளர்களாக செயல்பட்டவர்கள். நீட் தேர்வு எழுதிய மாணவிகளின் உள்ளாடைகளை சோதனை செய்ய ஊழியர்களுக்கு அறிவுறுத்தியதும், உள்ளாடைகளை அகற்ற உத்தரவிட்டதும் இவர்கள்தான் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.