வருகிறது மற்றுமொரு சர்ச்சை படம்

இந்திய மொழிகளிலேயே மலையாளத்தில் தான் ஓடிடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. வாரம்தோறும் ஒன்றிரண்டு புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் தரமான படங்களை ஓடிடி நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதால் அங்கு புதிய சிந்தனை கொண்ட இயக்குனர்களால் புதிது புதிதான கதை களத்தில் உருவாகும் படங்கள் வெளிவருகிறது.

அந்த வரிசையில் வருகிறது ஹோலிவோண்ட் (புனித காயம்) என்கிற மலையாளப் படம். அசோக் ஆர் நாத் என்கிற புதுமுகம் இயக்கி உள்ள இந்த படத்தில் ஜானகி சுதீர், அம்ரிதா வினோத், சபு பருதீன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். உன்னி மடாவூர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ரோனி ரபேல் இசை அமைத்துள்ளார். ஆகஸ்ட் 12ம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவருகிறது.

பள்ளியில் இருந்தே நெருங்கிய தோழிகளாக இருக்கும் இருவரின் லெஸ்பியன் உறவை பற்றியதுதான் கதை. தோழிகளில் ஒருத்தி பிடிக்காத ஒருவனுக்கு மனைவியாகிறாள். அவன் மூலம் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல இன்னல்களுக்கு ஆளாகிறாள். இன்னொருத்தி வலுக்கட்டாயமாக கன்னியாஸ்திரி ஆக்கப்படுகிறாள்.

ஒருத்திக்கு ஆணின் பாலியல் கொடுமையும், ஒருத்திக்கு ஆண்துணையே இல்லாத நிலையும் வாழ்வில் அமைகிறது. இதனால் அவர்கள் தங்களின் சுய சந்தோஷத்திற்காக லெஸ்பியனாகிறார்கள். அவர்களின் இந்த உறவை சமூகமும், மதமும் எப்படி பார்க்கிறது என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.