அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்க பட்டியல் தயாரிப்பு: கவனமுடன் இறுதிசெய்ய கல்வித் துறை உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் வகையில் பட்டியலை கவனமுடன் இறுதிசெய்து அனுப்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் வெ.ஜெயக் குமார் (தொழிற்கல்வி), அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்குவதற்கான உத்தேச தேவைபட்டியலை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கு நரிடம் எமிஸ் தளம் மூலம் கடந்த ஜூலை 11-ம் தேதி நிலவரப்படி உத்தேசப் பட்டியல் பெறப்பட்டது. அதில் பிளஸ் 1 வகுப்பில் 4 லட்சத்து 23,300 மாணவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் மிதிவண்டி பெற தகுதியான மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து ஆணை யரகத்துக்கு மின்னஞ்சல் மூலம் உறுதிசெய்ய வேண்டும். இதில் வேறுபாடு இருப்பின், அதுசார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள் பொறுப் பேற்க நேரிடும். எனவே,கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.