“சிறைகளுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்!" – சிபிஐ விசாரணைக்கு கெஜ்ரிவால் கண்டனம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் புதிய கலால் கொள்கை குறித்து விசாரணை நடத்துமாறு, மத்திய புலனாய்வு அமைப்புக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா இன்று பரிந்துரை செய்தார். இதில், டெல்லி மாநில துணை முதல்வரும், கலால்துறையின் அமைச்சருமான மனீஷ் சிசோடியாவை, வினய் குமார் நேரடியாகவே குற்றம்சாட்டியிருக்கிறார்.

டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா

இந்த நிலையில் வினய் குமாரின் இத்தகைய நடவடிக்கைக்கு பா.ஜ.க தலைமையிலான அரசை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கெஜ்ரிவால், “மனீஷ் சிசோடியாவை அவர்கள் கைதுசெய்வார்கள் என்று நான் கூறிக்கொண்டே இருக்கிறேன். இந்தியாவில் தற்போது ஒரு புதிய அமைப்பு உள்ளது. அதில், யார் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்கிறார்கள். பிறகு அந்த நபர்மீது ஒரு போலி வழக்கு உருவாக்கப்படுகிறது. அதுபோல இந்த வழக்கும் போலியானது. இதில் உண்மை ஏதும் இல்லை.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

எங்கள்மீது பல வழக்குகளை அவர்கள் போட்டிருக்கின்றனர். இருப்பினும், சிறைகளுக்கு நாங்கள் பயப்படவில்லை. ஆம் ஆத்மி-க்கான நேரம் வந்துவிட்டது. பஞ்சாப்பில் வெற்றி பெற்றதிலிருந்து ஆம் ஆத்மி வளர்ந்து வருகிறது. நாங்கள் தேசிய அளவில் உயர்வதை அவர்களால் பார்க்க முடியவில்லை. அதனால்தான் அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் எதுவும் எங்களைத் தடுக்காது” என பா.ஜ.க அரசைச் சாடினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.