போலி செய்திகளை பரப்பிய 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது – மந்திரி அனுராக் தாக்கூர்

புதுடெல்லி,

2021-22ஆம் ஆண்டில் போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

இதனுடன், 19 சமூகவலைதள கணக்குகள் மற்றும் 747 யூஆர்எல்களும் தடை செய்யப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், கூறுகையில்,

“தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000இன் பிரிவு 69ஏ-வின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இணையதளத்தில் பொய்யான செய்திகளை பரப்பி பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா தொடர்பான போலிச் செய்திகளைச் சரிபார்க்க, பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு மார்ச் 31, 2020 அன்று உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு சமூகவலைதளங்களில் போலி செய்திகள் மற்றும் 875 இடுகைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இணையத்தில் பொய்யான செய்திகளை பரப்புவதன் மூலமும், பிரச்சாரம் செய்வதன் மூலமும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் நிறுவனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தியது” என்று தாக்கூர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.