விண்வெளிக் கதிரியக்க சவால்களைச் சமாளிக்கும் ‘செர்ன்’!

‘எந்த ஒரு பொருளுக்கும் நிறை (Mass) எனும் குணத்தை அளிக்கிறது கடவுள் துகள்’ என ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பை வேடிக்கையாகக் குறிப்பிடுவது உண்டு. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய செர்ன் (CERN) ஆய்வுக்கூடம் சில நாட்களுக்கு முன்னர் செலஸ்டா CELESTA (CERN Latchup Experiment STudent sAtellite) எனும் கையளவே உள்ள சிறிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.

ஒரு கிலோ எடை, பத்து சென்டிமீட்டர் நீள, அகல, உயரம் உடைய கனசதுர செயற்கைக்கோள் இது. அதனால்தான் இது ‘கியூப்சாட்’ எனப்படுகிறது. பூமியைச் சுற்றிப் படர்ந்துள்ள வான் ஆலன் கதிர்வீச்சுப் பட்டை எனும் விண் பகுதியில் இது ஆய்வு நடத்தவுள்ளது.

இந்த நுண் செயற்கைக்கோள் ரேட்மான் (RadMon) எனும் கதிரியக்கப் பாதிப்பை அளவிடக்கூடிய கருவியை ஏந்திச் செல்கிறது. தன்னிடமுள்ள மின்னணுக் கருவிகளில் கதிரியக்கம் ஏற்படுத்தும் சேதாரம் குறித்து ரேட்மான் ஆய்வுசெய்யும்.

கதிர்வீச்சு நிரம்பிய விண்வெளி

சூரியன் உட்பட விண்மீன்கள் அனைத்தும் எலெக்ட்ரானைப் போன்ற மின்னேற்றம் கொண்ட அயனித் துகள்களை எல்லா நேரமும் வெளியிட்டுவருகின்றன. சூரியனில் சூறாவளி ஏற்படும்போது இதன் தீவிரம் அதிகரிக்கும். எங்கோ விண்ணில் வெடித்துச் சிதறும் விண்மீன்களிடமிருந்து பெரும் ஆற்றலோடு வெளிப்படும் இந்த அண்டக் கதிர்கள் பூமியை நோக்கி வரும்.

மழையிலிருந்து குடை நம்மைப் பாதுகாப்பதுபோலப் பூமியின் காந்தப்புலம் ஆற்றல்மிக்க இந்தக் கதிர்கள் பூமிக்குள் நுழையவிடாமல் தடுத்துவிடுகிறது. காந்தப்புலத்தில் மோதும் இந்தக் கதிர்கள் பூமிக்கு மேலே இரண்டு அடுக்குகளாகப் போர்வைபோலப் படர்ந்துள்ளன. இந்த அடுக்குகளே உள், வெளி வான் ஆலன் கதிர்வீச்சுப் பட்டைகள் என அழைக்கப்படுகின்றன.

மின்னணுக் கருவிகளுக்கு ஆபத்து

பூமியின் மேற்பரப்பிலுள்ள மின்னணுக் கருவிகளுக்கு இந்தக் கதிர்களால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், பூமியின் வளிமண்டலத்துக்கு மேலே வான் ஆலன் கதிர்வீச்சுப் பட்டைகளின் ஊடே சுற்றிவரும் செயற்கைக்கோள்களில் பெரும் சேதாரம் ஏற்படும்.

அப்போது பிரபஞ்சம் உருவான காலத்தில் இருந்த நிலை ஏற்படும். அந்தக் கலத்தில் இருக்கும் துகள்கள் மோதலில் சிதறி வெளிப்படும். இந்தத் துகள்களை நுட்பமாக இனம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் ரேட்மான் (RadMon) கருவி.

ஆய்வு

விண்வெளிக் கதிரியக்கத்தால் செயற்கைக்கோள்களுக்கு மட்டும் ஆபத்து இல்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்-வீராங்கனைகள், எதிர்காலத்தில் நிலவு, செவ்வாய்க்கு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர், வீராங்கனைகளுக்கும் விண்வெளிக் கதிரியக்கம் ஒரு சவாலே.

விண்வெளியின் கதிரியக்கச் சூழலில் சேதாரம் ஏற்படாமல் செயற்கைக்கோள் செயல்படுமா எனப் பரிசோதிக்க ரேட்மான் (RadMon) கருவியைப் பயன்படுத்தி ‘சார்ம்’ (CERN’s High energy AcceleRator Mixed field facility – CHARM) எனும் பரிசோதனை நிலையத்தை செர்ன் ஆய்வுக்கூடம் உருவாக்கியுள்ளது.

விண்வெளியில் நிலவும் கதிரியக்க நிலையை இந்த சோதனைக்கூடம் பூமியில் செயற்கையாக ஏற்படுத்தும். விண்ணில் செலுத்தப்படுவதற்கு முன்னர் மின்னணுக் கருவிகள் இந்த சோதனைக்கூடத்தில் தரப்பரிசோதனை செய்யப்படும். செலஸ்டா தரும் தகவல்கள் இந்த சோதனைக்கூடத்தை மேம்படுத்த உதவும்.

புதுமை படைக்கும் ஆய்வு

இந்தத் தகவல்களைக் கொண்டு மேலும் வலுவான கதிரியக்கக் கேடயங்களை உருவாக்கலாம். எதிர்காலத்தில் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்களில் மின்னணுக் கருவிகளைப் பாதுகாக்கலாம். விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர், வீராங்கனைகளையும் விண்வெளிக் கதிரியக்க ஆபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

> இது, மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரச்சார்’ அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.