Sri Lanka New PM: இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு!

இலங்கை நாட்டின் புதிய பிரதமராக, தினேஷ் குணவர்தன பதவி ஏற்றுக் கொண்டார்.

அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், அதை கைப்பற்றினர். பொது மக்களின் போராட்டத்தை கண்டு மாலத்தீவு நாட்டிற்கு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே, பிறகு, சிங்கப்பூர் நாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளார். இதை அடுத்து, இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக விலகினார்.

இதைத் தொடர்ந்து, இலங்கையின் புதிய அதிபர் தேர்தல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார். தொடர்ந்து, இலங்கையின் எட்டாவது புதிய அதிபராக, ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.

Ranil Wickremesinghe: இலங்கை 8வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு

இந்நிலையில் இன்று, இலங்கையின் புதிய பிரதமராக, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவே நியமனம் செய்து அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதைத் தொடர்ந்து இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்தன இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

பிரதமராக பதவி ஏற்றுள்ள தினேஷ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், இலங்கை நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 1983 ஆம் ஆண்டு முதல் இடதுசாரி மகாஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவராக உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.