இலங்கை கடற்படை சிறைபிடித்த 6 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம்  பகுதி மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கடந்த 21ந்தேதி கைது செய்தது. இதையடுத்து, அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை அடித்து நொறுக்குவதும், மீனவர்களை  அடிக்கடி கைது செய்வதும்  அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  தனுஷ்கோடி மீன்பிடித்துக் கொண்டிருந்த  ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை குற்றம் சாட்டி உள்ளது. அத்துடன், மீனவர்களின்  விசைப்படகையும்  கைப்பற்றியது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரிக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இது ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து,  இலங்கை கடற்படை சிறைபிடித்த 6 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.