பஞ்சாப் முதல்வராக இருப்பவர் பகவந்த் மான். அவருக்கு சொந்தமான வீடு சண்டிகரில் இருக்கிறது. அந்த வீட்டின் வெளியே அனுமதி இல்லாமல் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்ததையடுத்து, சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அவரின் வீட்டுப் பகுதியை ஆய்வு செய்து ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக பாஜக-வின் உள்ளூர் கவுன்சிலர் மகேஷ் சிங் சித்து தெரிவித்திருப்பதாவது, “ பஞ்சாப் முதல்வர் இல்லத்தில் உள்ள ஊழியர்களிடமும், வீட்டுக்கு வெளியே உள்ள சாலைகளில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அப்படியே செய்து வந்தனர். இது குறித்து கடந்த ஆண்டு எனக்கு பலமுறை புகார்கள் வந்தன.
வீடு எண்கள் 44, 45, 6 மற்றும் 7 ஆகிய அனைத்தும் பஞ்சாப் முதல்வரின் இல்லத்தின் பகுதிகளாகும். முதலமைச்சர் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் அவருடைய சொந்த வீட்டில் இது மாதிரியான செயல்கள் நடைபெறுகிறது. இனிமேல் இது போல நடக்காது என்று நம்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.