இஸ்தான்புல்: ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் பெரியளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதோடு, பணவீக்கமும் அதிகரித்துள்ளது. இந்த போரின் காரணமாக உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. கருங்கடல் பகுதியில் இருந்து உக்ரைன் தானியம் ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுத்து வைத்துள்ளது.
இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பொருட்கள் வந்து சேர்வதற்கு பெரும் கால தாமதமும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, உக்ரைன் துறைமுகங்களில் 25 மில்லியன் டன் கோதுமை மற்றும் பிற தானியங்கள் தேங்கிக் கிடப்பதால் தானியங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கருங்கடல் பகுதியை திறந்துவிட இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. முயற்சி மேற்கொண்டது. இதன் அடிப்படையில் கடந்த வாரம் துருக்கியின் இஸ்தான்புல்லில் துருக்கி மற்றும் ஐ.நா அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்ய தரப்பின் ராணுவப் பிரதிநிதிகளுக்கு இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் உக்ரைனும் ரஷ்யாவும் கருங்கடல் துறைமுகங்களில உள்ள தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் நேற்று முன்தினம் கையெழுத்திட்டன. தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் இஸ்தான்புல்லில் துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ஆகியோரின் முன்னிலையில் கையெழுத்தானது. 2 நாடுகளிடையே தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தானதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
இந்த ஒப்பந்தம் மூலம் கருங்கடல் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள வர்த்தக வழித்தடங்கள் மீண்டும் திறக்கவும் உணவுப் பொருள் பற்றாக்குறை அபாயத்திலிருந்து உலக நாடுகளைப் பாதுகாக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்குவும் உக்ரைன் உள்கட்டமைப்புத் துறை அமைச்சா் ஒலெக்ஸாண்டா் குப்ரகோவும் கையெழுத்திட்டுள்ளனர்.