இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் எங்களை அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது தலைமன்னார், தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரு விசைப் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 6 தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், இலங்கை சிறையில் தவிக்கும் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அனைத்து படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் நேற்று முதல் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.