சென்னை: மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் பனகல் மாளிகை, வில்லிவாக்கம் பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேளச்சேரி காந்தி சாலை, அம்பத்தூர் தொழிற்சாலை பேருந்து நிலையம், தண்டையார்பேட்டை அஞ்சல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், பாஜக மாவட்டத் தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் விஜய் ஆனந்த் தலைமை வகித்தார். பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்டப் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் சங்கர், மாவட்டப் பார்வையாளர் ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வினோஜ் பி செல்வம் பேசும்போது, ‘‘விடியல் ஆட்சி தருவதாககூறி, திமுக அரசு மக்களை வஞ்சிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில், அமைச்சர்கள் ஒன்றுசேர்ந்து தமிழகத்தை சீரழிக்கின்றனர். சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து வேண்டும். இல்லாவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்’’ என்றார்.