மதுக்கடைகளை மீண்டும் ஏற்று நடத்த டெல்லி அரசு முடிவு!

டெல்லியில் மதுக்கடைகளை மீண்டும் அரசே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், புதிய மதுக் கொள்கை கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சில்லறை மதுபானக் கடைகளை இனி அரசு நடத்துவதில்லை என்ற முடிவெடுக்கப்பட்டு மதுபான விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டது.

இந்த கொள்கையின் கீழ் 850 மதுபானக் கடைகளை திறக்க தனியாருக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அந்த மதுக் கொள்கை இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் இரண்டு முறை மது கொள்கை நீட்டிக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள புது மதுக் கொள்கை நாளையுடன் நிறைவடைகிறது.

இதற்கிடையே புதிய மதுபானக் கொள்கையில் விதிமுறை மீறல் நடைபெற்ற தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில் புதிய மதுபானக் கொள்கையை கைவிட அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்த டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, 2022 – 23 ஆம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கை இறுதி செய்யப்படும் வரை பழைய மதுபானக் கொள்கையே கடைபிடிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

பழைய மதுபானக் கொள்கையின்படி சில்லறை மதுபானக் கடைகளை அரசே நடத்தும். ஊழலை தடுப்பதற்காக டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, புதிய மதுபானக் கொள்கைக்கு முன்பாக 850 மதுபானக் கடைகள் மூலம் அரசுக்கு 6,000 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் வந்த நிலையில் புதிய மதுபானக் கொள்கையின் மூலம் அதே அளவிலான கடைகளின் மூலமாக அரசுக்கு 9,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.