சஞ்சய் ராவத்திற்கு இறுகும் பிடி – காலையிலேயே குட் மார்னிங் சொன்ன அமலாக்க துறை!

சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

1,034 கோடி ரூபாய் நில மோசடி தொடர்பான வழக்கில், சிவசேனா மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத் துறை முன்பு சஞ்சய் ராவத் நேரில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கிடையில், இந்த வழக்கில் ஜூலை 20 ஆம் தேதி ஆஜராகும்படி சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அந்த தேதியில் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. தொடர்ந்து 27 ஆம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத் துறை சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்கு பின் ஆஜராவதாக சஞ்சய் ராவத் அமலாக்கத் துறையிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில், இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நில மோசடி வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சஞ்சய் ராவத், “நான் இறந்தாலும் சரணடைய மாட்டேன். பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் பயப்பட மாட்டேன். சிவசேனா தலைவர் பாலா சாஹேப் தாக்கரே, எங்களுக்கு போராட கற்றுக் கொடுத்தார். சிவசேனாவுக்காக நான் தொடர்ந்து போராடுவேன். அரசியல் பழிவாங்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.