சர்வதேச புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரை கவுரவிக்கும் நிகழ்ச்சி ரத்து: சர்ச்சை கருத்துகள் உள்ளதாக போலீசில் புகார்

ஆக்ரா: சர்வதேச புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர்  கீதாஞ்சலி யை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஆக்ராவில் ரத்து செய்யப்பட்டது. இவ்விசயம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், ‘ரெட் சமாதி’ என்ற நாவல் எழுதி சர்வதேச புக்கர் பரிசு பெற்ற இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி யை கவுரவிக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அவரது அந்த நாவலில் ஆட்சேபனைக்குரிய குறிப்புகள் இருப்பதாகவும், அதனால் அவருக்கு பாராட்டு விழா நடத்தக் கூடாது எனக்கூறி ஆக்ராவை சேர்ந்த சந்தீப் குமார் பதக் என்பவர் ஷதாபாத் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும் ஹத்ராஸ் போலீசார் தெரிவித்தனர். ஆனால், கீதாஞ்சலி யை கவுரவிக்கும் விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து  கீதாஞ்சலி கூறுகையில், ‘எனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்காக வருத்தப்படுகிறேன். இப்போதைக்கு நான் பொது  நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறிவிட்டேன். நான் எழுதிய நாவல் வேண்டுமென்றே அரசியல் சர்ச்சைக்குள்  இழுக்கப்படுகிறது. இந்த நாவலில் உள்ள  கருப்பொருள்கள் இந்திய புராணங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதை  எதிர்ப்பவர்கள் இந்து புராணங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தான் தங்களது வாதங்களை  எழுப்ப வேண்டும்’ என்றார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் சோகமான நினைவுகளுடன் வாழும் ஒரு வயதான பெண், பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்புவதுதான் ‘ரெத் சமாதி’ படத்தின் கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.