பொருளாதார பிரச்னைகளில் இலங்கை, பாக். போன்ற நிலையை இந்தியா சந்திக்காது: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தகவல்

புதுடெல்லி: இலங்கை, பாகிஸ்தான் போன்ற பொருளாதார பிரச்னைகளை இந்தியா சந்திக்காது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவு  இருக்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க  ரிசர்வ் வங்கி சிறப்பாக பணியாற்றி உள்ளது. வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடன் அளவும் குறைவாகவே உள்ளது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நிலை இந்தியாவுக்கு ஏற்படாது. உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வரும்நிலையில், கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியதால்,  பணவீக்கம் குறைந்துள்ளது. உலகில்  உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கான பணவீக்கம்தான் அதிகமாக நிலையில், சர்வதேச அளவில் இந்த பணவீக்கம்  குறையும்போது இந்தியாவிலும் குறையும்’ என்றார். சமீபத்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, ஜூலை  22ம் தேதியன்று இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 571.56 பில்லியன்  டாலராக இருந்தது. இந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.152  பில்லியன் டாலர் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.