சண்டிகர்: ‘போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு’ பற்றிய 2 நாள் கருத்தரங்கை சண்டிகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் ஆனபோது, போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் கொள்கையை மத்திய அரசு பின்பற்றியது. போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை விரைவாகவும், சரியான திசையிலும் மேற்கொள்ளப்படுகிறது. இது நல்ல பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது.
போதைப் பொருட்கள், அதை உட்கொள்பவர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல், இந்த சமூகம், பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கும் கேடு விளைவிக்கிறது. போதைப் பொருட்கள் மூலம் திரட்டப்படும் பணம், நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதை நாம் முற்றிலும் ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கம் நடைபெற்ற போது டெல்லி, சென்னை, குவாஹாட்டி ஆகிய இடங்களில் 31,000 கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.