அதிமுக பெயர்ப் பலகை: இணையத்தில் வைரலான ஜெயக்குமார் ‘செயல்’

சென்னை: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் முன்பு வைக்கப்பட்டிருந்த அதிமுக பெயர்ப் பலகையை தங்களது பக்கம் எடுத்துவைத்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி இன்று முதல் தொடங்குகிறது. இப்பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென ‘6 பி’ என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியின் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமாரும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோவை செல்வராஜும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக வந்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் முன்பு அதிமுக பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்திருந்தார். பின்னர், கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் வந்தனர். அப்போது ஜெயக்குமார், கோவை செல்வராஜ் இடத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பெயர்ப் பலகையை தங்களது பக்கம் எடுத்து வைத்துக்கொண்டார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.