சீனாவின் கடும் மிரட்டலுக்கு நடுவே, தைவானில் போர் ஒத்திகை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தைவான் கடைசியில் சீனாவுடனான போருக்கு தயாராகி வருகிறது. விடுமுறைக்கு சென்ற இராணுவ அதிகாரிகள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவமும் முக்கிய பகுதிகளுக்கு இடம்பெயரவும் தொடங்கியுள்ளது.
மட்டுமின்றி, விமானப்படைகள் உடனடியாக போருக்கு தயாராக வேண்டு எனவும் முக்கிய அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி திங்கட்கிழமை முதல் தமது ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முன்னெடுத்துள்ளார்.
முதலில் சிங்கப்பூர் செல்லவிருக்கும் பெலோசி, தொடர்ந்து தைவான் செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் அவரது தைவான் பயணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, தாங்கள் வேடிக்கை பார்க்கமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், பெலோசியின் பயணத் திட்டத்தில் தைவான் விஜயம் தொடர்பில் குறிப்பிடாமல் சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணப்பட உள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளது.
பெலோசி தைவானுக்கு பயணப்படுவார் என்றால் அது பல மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனவும், சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது போன்றது என சீன வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் காட்டமாக பதிலளித்துள்ளார்.
இதனிடையே, சீனாவின் பகிரங்க மிரட்டலை அடுத்து தைவான் போர் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளதுடன், பொதுமக்களுக்கும் ஆயுத பயிற்சி வழங்க தயாராகியுள்ளது.