'என்ஜாய் எஞ்சாமி' பாடல், சந்தோஷ் நாராயணன் – அறிவு முட்டல், மோதல்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். அவரது தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் மகளான தீ, அறிவு பாடிய 'என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் கடந்த வருடம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. யு டியூபில் 429 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்தப் பாடல் சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் தீ–யால் மேடையில் பாடப்பட்டது. அந்நிகழ்வில் அறிவு பாடவில்லை. இருப்பினும் அவரைப் பற்றி பாடல் பாடுவதற்கு முன்பு எதுவும் சொல்லவில்லை. இது கடந்த சில நாட்களாகவே சர்ச்சையில் இருந்து வந்தது.

இந்நிலையில் இப்பாடலைப் பாடிய அறிவி சமூக வலைத்தளத்தில், “இசை கோர்த்து, எழுதி, பாடி, நடித்ததுதான் 'எஞ்சாய் எஞ்சாமி. யாரும் இதற்காக டியூனோ, மெலடியோ, ஒரு வார்த்தையே தரவில்லை. ஆறு மாதங்களுக்கும் மேலாக தூக்கமில்லாமல், பல அழுத்தமான இரவுகளுக்கிடையில் இந்தப் பாடலை உருவாக்கினேன். இது கூட்டு முயற்சி, ஒன்றிணைந்து உருவாக்கியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் தூக்கிச் செல்லலாம். ஆனால், நீங்கள் முழித்திருக்கும் போது, நடக்காது. எப்போதும் உண்மையே வெல்லும்,” என்று பதிவு ஒன்றைப் போட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன், “2020 டிசம்பர் மாதம், நமது மண்ணையும், இயற்கையைக் கொண்டாடும் விதமாக ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்ற ஐடியாவுடன் வந்தார். அதன் பின் நான் இசை கோர்த்து, அரேஞ் செய்து, புரோகிராம் செய்து? பதிவு செய்து இணைந்து பாடிய பாடல் என்ஜாய் எஞ்சாமி. எனது மேலே கண்ட பணி, 'தயாரிப்பாளர்' என உலகம் முழுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. தனித்துவமான கலையை உருவாக்க நான், தீ, அறிவு ஆகியோர் ஒன்றாக அன்புடன் இணைந்து பணியாற்றினோம்.

ஒருவராக தனித்து பணியாற்ற வேண்டாம், மூவரில் யாராவது ஒருவர் இணைந்து இசை கோர்க்கவோ, பாடவோ, எழுதவோ செய்யலாம் என முடிவு செய்தோம். தீ, அறிவு இந்தப் பாடலை பாட முடிவு செய்தார்கள். உருவாக்கத்திலும் இணைந்து பணியாற்றினார்கள். தீ அவருடைய வரிகளுக்கு இசைக்கோர்ப்பு செய்தார். அறிவு பாடலை எழுத ஒத்துக் கொண்டார். மற்ற டியூன்களை நான் கம்போஸ் செய்தேன். அறிவு பாடிய பகுதியையும் நான் கம்போஸ் செய்தேன்.

இப்பாடலின் மூலம் வரும் வருமானம் எனக்கும், தீ, அறிவு ஆகியோருக்கு சமமாக வர வேண்டும் என வெளிப்படையாக இருந்தேன். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவின் போது அறிவு வெளிநாட்டில் இருந்தார். அதனால், அப்போது அறிவு பாடியவை பயன்படுத்தப்பட்டன. அறிவு ஒரு சிறந்த கலைஞர் என எப்போதும் நான் நினைக்கிறேன். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அனல் மேலே பனித்துளி' படத்தில் இடம் பெற்று விரைவில் வெளிவர உள்ள அறிவு பாடியுள்ள 'கீச்சே கீச்சே' பாடல் அறிவு பணிகளில் எனது அபிமானப் பாடல். என்ஜாய் எஞ்சாமி பாடல் போல இந்தப் படத்திற்காக அனைத்து அன்பையும் கொடுத்துள்ளார் அறிவு.

தனிப்பட்ட விதத்திலும், பொதுவெளியிலும், இந்த சிறப்பான பாடலுக்காக எந்தவிதமான விவாதத்திற்கும் நான் தயார். மக்களை ஒன்றிணைக்கவும், கலையை வளர்க்கவும் வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்.

வாங்கோ, வாங்கோ, ஒண்ணாகி….,” என நீண்ட கடிதத்தின் மூலம் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.