தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி முனையில் 8 பெண் மொடல்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 82 ஆண்கள் இன்று நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்.
ஜூலை மாதம் 28ம் திகதி ஜோகன்னஸ்பர்க்கிற்கு அருகே க்ரூகர்ஸ்டோர்ப் என்ற கிராமத்தில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
8 பெண் மொடல்கள் உள்ளிட்ட குழு ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் தங்க சுரங்கம் ஒன்றின் அருகாமையில் பாடல் காணொளி ஒன்றை படமாக்கி வந்துள்ளனர்.
அப்போது திடீரென்று ஆயுதங்களுடன் சூழ்ந்துகொண்ட கும்பல் ஒன்று, அந்த மொடல்களை வன்புணர்வுக்கு இரையாக்கியுள்ளது. இதில் 19 வயது இளம்பெண் தொடங்கி 37 வயது பெண் வரையில் அந்த கும்பலால் பத்துக்கும் மேற்பட்ட முறை சீரழிக்கப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, அந்த கும்பல் படக்குழுவினர் மற்றும் பெண்களின் நகைகள், மொபைல்போன் உட்பட அனைத்தையும் கொள்ளையிட்டும் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தென்னாப்பிரிக்காவை மொத்தமாக உலுக்கியுள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
தென்னாப்பிரிக்காவை பொறுத்தமட்டில் மிக அதிக குற்ற விகிதங்கள் கொண்ட நாடாகும். மட்டுமின்றி உலகின் மூன்றாவது மிக அதிக பலாத்கார விகிதங்களைக் கொண்டுள்ள பகுதி எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே விசாரணையை முடுக்கிவிட்ட பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் மொத்தம் 84 சட்டவிரோத சுரங்க தொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.
அவர்களை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஆனால் அவர்கள் மீது திருட்டு வழக்கு மட்டுமே சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை பலாத்கார வழக்கு பதியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தின் போது 12 பெண்களும் 10 ஆண்களும் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது திடீரென்று சுற்றிவளை கும்பல் ஒன்று, பெண்களை ஒவ்வொருவராக தூக்கிச் சென்று சீரழித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் மீது அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் இரண்டு சுரங்க தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயங்களுடன் தப்பியுள்ளார். ஆனால் 17 பேர்கள் அப்பகுதியில் இருந்து மாயமாகினர்.
இதனையடுத்து அப்பகுதியை மொத்தமாக சுற்றிவளைத்த பொலிசார் 65 சுரங்க தொழிலாளர்களை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை விசாரணை அதிகாரிகளிடம் புகாராக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இதுவரை அடையாளம் காணும்பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
இதனிடையே, திங்களன்று நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு சிறிய குழு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி விரைவான நீதி கேட்டு முழக்கமிட்டனர்.