தேசிய விருது கமிட்டியில் சினிமா தெரியாதவர்கள்: அடூர் கோபாலகிருஷ்ணன் சாடல்

திருவனந்தபுரம்: சினிமா பார்க்காத, சினிமா  குறித்து எதுவுமே தெரியாதவர்கள் தான் தேசிய விருதுக் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்று மலையாள சினிமா இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அடூர் கோபாலகிருஷ்ணன் பேசியது: தேசிய சினிமா விருது என்பது இப்போது ஒரு கொடுமையான பொழுதுபோக்காக மாறிவிட்டது. யார் என்றே தெரியாத விருதுக் கமிட்டினர்தான் இந்த கொடுமைகளில் ஈடுபடுகின்றனர். யாரெல்லாமோ விருதுக் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். யாருக்கெல்லாமோ அவர் விருதுகளை வாரி வழங்குகிறார். எதற்காக இப்படி விருதுகளை கொடுக்கின்றார்கள் என்று யாரும் கேட்கக்கூடாது. அப்படி கேட்பதால் எந்த அர்த்தமும் இல்லை. ஏனென்றால் அந்த கேள்விக்கான பதில் என்னவென்று அனைவருக்குமே தெரியும். இதெல்லாம் பெரிய அநியாயம் என்று மட்டுமே கூற முடியும்.  பாலிவுட் ரசிகர்கள் தான் விருது கமிட்டியில் உள்ளனர். சினிமா பார்க்காதவர்களும், சினிமா பார்த்தால் எதுவுமே புரியாதவர்களும் தான் தங்களது அன்பளிப்பாக சிலருக்கு மட்டும் விருதுகளை கொடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.