கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தி, அரசாங்கம், மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. தொண்டு நிறுவனங்களும், அந்தந்த ஏரியா அரசியல் பிரமுகர்களும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சண்டிகரில் தெருவோரம் உணவுக்கடை நடத்தும் வியாபாரி ஒருவர், கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக சோளா பூரி வழங்குவதாக வெளியிட்டுள்ள விளம்பரம் அப்பகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
சண்டிகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உணவுக்கடை நடத்தி வருபவர் சஞ்சய் ராணா. இவர், ‘கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், அன்றைய தினமே, தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அடையாள அட்டையுடன் வந்தால் சோளா பூரி இலவசமாக வழங்கப்படும்’ என்ற அறிவிப்பு பலகையுடன் கடந்தாண்டில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச சோளா பூரி கொடுத்து வந்துள்ளார்.
சஞ்சையின் இந்த முயற்சியை பாராட்டி பிரதமர் மோடி கடந்தாண்டு, ‘ மன்கி பாத்’ நிகழ்ச்சியிலும் பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது பூஸ்டர் ஊசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ள அரசு, அதே நேரத்தில் சுதந்திரதினத்தையொட்டி, ’18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆகஸ்ட் 30-க்குள் இலவச பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்.
இதற்கான தடுப்பூசி முகாம்கள் உங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிமக்கள் எல்லாரும் தடுப்பூசி போட்டுகொள்வதை உங்கள் கடமையாக கொண்டு செயல்படுங்கள்’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மத்திய அரசின் இந்த கோரிக்கையை தொடர்ந்து, இத்தனை நாள் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இலவச சோளா பூரி வழங்கிய சஞ்சய், இனி பூஸ்டர் தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவச சோளா பூரி வழங்க உள்ளதாக விளம்பரம் செய்துள்ளார்.
இது குறித்து தனியார் ஊடகங்களிடம் பேசியுள்ள சஞ்சய் ராணா, “ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த அளவிற்கு நாட்டிற்காக சேவை செய்வது அவசியம். சிறு வயதிலிருந்து ராணுவ வீரர் ஆக வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை. நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது என் தந்தை இறந்து விட்டார். குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன்.
சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். பின் உணவுக்கடையைத் தொடங்கினேன். உணவுக்கடை நடத்தி வருவதையும் பெருமையாகத்தான் பார்க்கிறேன். இந்த தொழிலின் மூலம் நாட்டுக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். எனது மகளும், மருமகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு இலவச சோளா பூரி வழங்கலாம் என்ற யோசனையை தந்தார்கள்.
நானும் விளம்பரம் செய்தேன். சில நாள்களில், வியாபாரமே இன்றி, நான் கொண்டு சென்ற அனைத்து பூரிகளையும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், எனக்கு லாபம் இல்லை என்று நான் வருத்தப்பட்டது இல்லை. இது சிறிய முன்னெடுப்பு தான். இதனை பிரதமர் பாராட்டுவார் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. பிரதமர் மோடி பேசியதன் மூலம் நாடு முழுவதும் நான் அறியப்பட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது.
பெரும்பாலான மக்கள் இப்போது பூஸ்டர் ஊசி போடுவதில் தயக்கம் காட்டுகிறார்கள். அவர்களை ஊக்குவிப்பதற்காக, ‘பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்டால், இலவச சோளா பூரி வழங்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறேன். நாட்டுக்கு என்னால் முடிந்த சிறிய நல்லது’ என்று கூறியுள்ளார்.