டெல்லி: பெரும்பாலான நாடுகளை காட்டிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என நிர்மல சீதாராமன் அறிவித்துள்ளார். விலைவாசி உயர்வு குறித்து மக்களவை விவாதத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். உலகிலேயே அதிக வேகத்துடன் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாக நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.இன்று கூடிய நாடாளுமன்ற கூட்ட தொடரில் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரையிலும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதன் பின்னர் மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பெரும்பாலான நாடுகளை காட்டிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதுஎனவும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை கடந்தும் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது எனவும் கூறினார்.மேலும் பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கு இடமில்லை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதார வளர்ச்சி மீண்டுள்ளது எனவும் உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி தொடருகிறது எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார். இதையடுத்து மக்களவையில் நிர்மலா சீதாராமன் உரையை புறக்கணித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.